அன்னிய முதலீடுகள்: ப.சி பொய் சொல்கிறார்-ஜெ
இந்திய பங்குச் சந்தைகளில் participatory notes (பங்கெடுக்கும் குறிப்புகள் என்னும் பத்திரங்கள்) மூலம் பின்லேடன், தாவூத் இப்ராகிம் உள்ளிட்ட தீவிரவாதிகள் முதலீடு செய்து வருவதாகவும் இதனால் 'பொருளாதார தீவிரவாதம்' உருவாகி வருவதாகவும் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
இதற்கு நிதியமைச்சகம் மூலம் பதில் தந்த ப.சிதம்பரம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குறித்து ஜெயலலிதா முழுவதுமாக புரிந்து கொள்ளவில்லை, பங்குச் சந்தை முதலீடுகளை இந்திய பங்கு வர்த்தக வாரியமான செபி கண்காணித்து வருகிறது, 'பார்ட்டிசிபேட்ரி நோட்களை' அளிக்கும் நிறுவனங்களின் பெயர் மற்றும் விவரங்களை செபியிடம் அளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என விளக்கம் தந்தார்.
மேலும் ஜெயலலிதாவுக்கு பார்ட்டிசிபேட்டரி நோட்கள் தொடர்பான பங்கு சந்தையில் பரிமாற்றங்களும் புரியவில்லை என்று கூறியிருந்தார்.
இந் நிலையில் சிதம்பரம் மீதான தனது தாக்குதலை மீண்டும் தொடர்ந்துள்ளார் ஜெயலலிதா. அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
அன்னிய முதலீடுகளை செபி கண்காணிப்பாதக ப.சிதம்பரம் கூறியிருப்பது முழுப் பொய். தேச பாதுகாப்பு விஷயத்தில் அவர் ஏன் இப்படி பொய் சொல்கிறார் என்று தெரியவி்ல்லை.
மொரீசியஸைச் சேர்ந்த கோல்ட்மேன் சேக்ஸ் (Goldman Sachs) நிறுவனத்தின் முதலீட்டில் இந்த உண்மை வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பரில் கோல்மேன் நிறுவனத்துக்கு செபி ரூ. 1 கோடி அபராதம் விதித்தது. தனது பார்ட்டிசிபேட்டரி நோட்களை இந்த நிறுவனம் மொரீசியஸைச் சேர்ந்த மேக்னஸ் கேபிடல் கார்பரேசன் என்ற நிறுவனத்துக்கு விற்றது. இது குறித்து செபிக்கு தகவல் தராததால் அந்த அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால் கடந்த மே மாதம் செபியின் இந்த உத்தரவுக்கு பங்கு பத்திர மேல்முறையீட்டு ஆணையம் (Securities Appellate Tribunal-SAT) தடை விதித்துவிட்டது.
மேலும் அன்னிய முதலீட்டு நிறுவனங்களிடம் (Foreign institutional investors) இது போன்ற விளக்கத்தை செபி கேட்பது சரியல்ல என்றும் ஆணையம் கூறிவிட்டது. அத்தோடு கோல்ட்மேன் சேக்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 1 லட்சத்தை தருமாறு செபிக்கு உத்தரவிட்டது.
ஆனால், அன்னிய முதலீடுகள் குறித்து எனக்கு விவரம் தெரியாது என ப.சிதம்பரம் கூறுகிறார். இவ்வாறு பொய் சொல்லும் சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதா மீது வருமான வரி வழக்கு நிலுவையில் இருப்பது நினைவுகூறத்தக்கது.