தனியார் பள்ளிகளிலும் இடஒதுக்கீடு-அரசு உத்தரவு
சென்னை: மாணவர் சேர்க்கையில் தனியார் பள்ளிகளும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது.
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதமும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18 சதவீதமும், பழங்குடியினருக்கு ஒரு சதவீதமும் இடஒதுக்கீடு அமலில் உள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் உள் ஒதுக்கீடாக தலா 3.5 சதவீதம் வழங்கப்படுகிறது.
இந் நிலையில் ஒரு சில அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படாமல் உள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் அதே பள்ளியில் படிப்பை தொடர இடம் தரப்பட வேண்டும் என்ற உத்தரவும் அமலில் உள்ளது. இதனால் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் சிக்கல் உள்ளதாக இந்தப் பள்ளிகள் கூறுகின்றன.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், அதே பள்ளியில் படித்த மாணவர்களை சேர்த்தது போக, எஞ்சியுள்ள இடங்களில் கண்டிப்பாக இடஒதுக்கீட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
இதற்கிடையே பிளஸ்-1 வகுப்பில் குரூப்வாரியாக இடஒதுக்கீட்டை அமலாக்குவது கஷ்டம். எனவே, ஒட்டுமொத்த இடங்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வாய்ப்பை அரசு வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கோரியுள்ளன.