ஜூலை 2 முதல் லாரி ஸ்டிரைக்
சென்னை: ஜூலை 2ம் தேதி முதல் லாரிகள் ஸ்டிரைக் மேற்கொள்ளவுள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செங்கோடன் கூறுகையில், மத்திய அரசு வரும் 30ம் தேதிக்குள் டீசல் விலை குறைப்பு, சேவை வரி நீக்கம் உள்ளிட்ட லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இல்லாவிட்டால் இந்தியா முழுவதும் ஜூலை 2ம் தேதி முதல் லாரிகள் ஸ்டிரைக் தொடங்கும் என அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதில் தமிழக லாரி உரிமையாளர்களும் பங்கேற்பர் என்றார்.
தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் லாரிகள் உள்ளன. இவை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அத்தியாவசியப் பொருட்கள் குறிப்பாக காய்கறி உள்ளிட்டவற்றின் விலை மிகக் கடுமையாக உயரும், பெரும் பற்றாக்குறை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
டேங்கர் லாரிகளும் ஸ்டிரைக்:
இந் நிலையில் சென்னையில் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்கில் குதித்துள்ளன.
சென்னை கொருக்குப்பேட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.) பெட்ரோலிய நிறுவனம் உள்ளது. இந்த பெட்ரோலிய நிறுவனத்தில் இருந்து தினமும் பெட்ரோல், டீசலை பெங்களூர், ஆந்திரா, புதுவை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்பட பல இடங்களுக்கு 450-க்கும் மேற்பட்ட ஒப்பந்த டேங்கர் லாரிகள் கொண்டு செல்கின்றன.
மேலும் சென்னை விமான நிலையத்துக்கும் இங்கு இருந்துதான் ஒயிட் பெட்ரோல்' எடுத்துச் செல்லப்படுகிறது.
நேற்று காலை திடீரென பெட்ரோல், டீசல் ஒப்பந்த லாரிகளின் உரிமையாளர்கள், லாரி டிரைவர்கள், கிளீனர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் 450க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் ஓடாமல் தண்டையார்பேட்டை, எழில் நகர், கொருக்குப்பேட்டை உள்பட பல இடங்களில் ஆங்காங்கே லாரிகளை நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்த திடீர் போராட்டம் பற்றி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வரதராஜன் கூறுகையில், பிளாக் லிஸ்ட்' என்ற பெயரில் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சில லாரிகளை உள்ளே வர தடை விதிக்கிறார்கள். இங்கிருந்து எடுத்துச் செல்லப்படும் பெட்ரோல், டீசலில் ஏதும் தவறு நடந்தால், அல்லது வழியில் கள்ளத்தனமாக யாரும் எடுத்தால், அந்த லாரிகளை பிளாக் லிஸ்டில் சேர்ப்பார்கள்.
ஆனால் தற்போது லாரியில் போல்ட், நட்டு லூசாக இருந்தால் கூட அந்த லாரியை பிளாக் லிஸ்ட் என்று கூறி அதிகாரிகள் லாரிகளையும், டிரைவர், கிளீனர்களையும் உள்ளே வர அனுமதி மறுக்கிறார்கள்.
இவர்கள் கெடுபிடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் டிரைவர், கிளீனர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு லாரியில் நட்டு லூசாக இருந்ததற்கு அந்த லாரியை பிளாக் லிஸ்டில் சேர்த்து விட்டார்கள். இதை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போகிறோம் என்றார்.
பெட்ரோல் டேங்கர் லாரிகள் ஓடாததால் சென்னை, கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.