வீரவசனம் என்னவாயிற்று?-அழகிரிக்கு 'சன்' கேள்வி!
மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி இணைப்பு தர வேண்டும் என்பதற்காகவே மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ராயல் கேபிள் விஷன் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு தனது சேனல்களை தர சன் டிவி நிறுவனம் மறுப்பதாகவும் இதை எதிர்த்து டிராய் மற்றும் நீதிமன்றத்தை நாடப் போவதாக மு.க. அழகிரி கூறியிருந்தார்.
கொடுமைப்படுத்தினோமா?:
இந் நிலையில் சன் டிவியின் கேபிள் டிவி இணைப்பு நிறுவனமான சுமங்கலி கேபிள் விஷன் (எஸ்.சி.வி.) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எஸ்சிவி நிறுவனம் தனது கேபிள் டிவி ஆபரேட்டர்களை துன்புறுத்தியதாகவும் அதற்கான ஆதாரமாக தன்னிடம் சி.டி. இருப்பதாகவும் (அழகிரி) குற்றம் சாட்டியுள்ளார்.
எஸ்.சி.வி துன்புறுத்தியிருந்தால் அதன் இணைப்பை பெற்று இத்தனை ஆண்டுகாலம் எஸ்சிவியுடன் அவர்கள் இணைந்து தொழில் புரிந்து இருப்பார்களா?
மேலும் அந்தப் பேட்டியில் மதுரையில் பெரும்பாலான ஆபரேட்டர்கள் அவர்களோடு (ராயல் கேபிள் விஷன்-ஆர்.சி.வி.) இணைந்துவிட்டதாகவும் சன் குழும இணைப்பு இல்லாததால் பொது மக்கள் யாரும் கவலைப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
பொது மக்கள் கொதிப்பு இல்லை என்றால் சன் குழு இணைப்பைப் பெற டிராய் மூலம் முயற்சிகள் நடைபெறுவதாக கூறுவது ஏன்?
வீர வசனம் ஏன்?:
மு.க. அழகிரிக்கு பொது மக்களுக்கு கேபி்ள் டிவி இணைப்புகளை குறைந்த கட்டணத்தில் தர வேண்டும் என்ற நல்லெண்ணம் இருந்திருந்தால், அதிமுக ஆட்சி நடைபெற்றபோது ஆர்.சி.வி. நிறுவனத்தை தொடங்காதது ஏன்?
சன் டிவி மற்றும் அதனோடு தொடர்புடையவர்களோடு ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று சில தினங்களுக்கு முன் வீர வசனம் பேசிவிட்டு, இப்போது சன் குழும இணைப்பைப் பெற, 'டிராய்'க்கு போகப் போவதாகவும், நீதிமன்றம் மூலம் முயற்சி்க்கப் போவதாகவும் துடியாய் துடிப்பது ஏன்?.
இவ்வாறு அழகிரிக்கு கேள்வி எழுப்பியுள்ளது சன் டிவி நிறுவனம்.
ஆபரேட்டர்களுக்கு சன் கொடுமை-அழகிரி:
முன்னதாக நேற்று நிருபர்களிடம் அழகிரி கூறுகையில், கடந்த 17 ஆண்டுகளாக கேபிள் ஆபரேட்டர்களை அடிமைகளாக வைத்து இவர்கள் (எஸ்.சி.வி.) கொடுமை செய்தது தான் அதிகம்.
எஸ்.சி.விக்கு செலுத்துவதை விட 50 சதவீத தொகையை எங்களுக்கு (ஆரி.சி.வி) ஆபரேட்டர்கள் அளித்தால் போதும். இதனால், பொதுமக்கள் கேபிளுக்கு மாதந்தோறும் செலுத்தும் தொகையில் 50 சதவீதம் வரை குறையும்.
தமிழகம் முழுவதும் சன் டி.டி.எச்யை விற்பனை செய்ய எஸ்.சி.வி., திட்டமிடுகிறது. தற்போது ஆபரேட்டர்கள் பலரும் ஆர்.சி.வி. வந்த பின் தங்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது என்கின்றனர்.
இந்நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில் ஆர்.சி.விக்கு 51 சதவீதம், கேபிள் ஆபரேட்டர்களுக்கு 49 சதவீதம் என கூட்டு நிறுவனமாக நடத்தலாம் அல்லது 60:4 0 என்ற அடிப்படையில் நடத்தலாம் என ஆபரேட்டர்களின் முடிவுக்கே விட்டுள்ளோம்.
டிராய் விதிமுறைப்படி டிவி நிறுவனங்கள், கேபிள் நிறுவனங்களுக்கு எவ்வித பாரபட்சமின்றி சேனல்களை வழங்க வேண்டும். உண்மைநிலை இவ்வாறு இருக்கும்போது, ஒரு பத்திரிகையில், சன் நிறுவனத்தின் சேனல்கள் ஆர்.சி.வியில் இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்ற தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.
அவர்கள் அரசியலாக்குகின்றனர்:
உண்மையில் சன் டிவி தான் சேனல்களை தர மறுத்து தங்கள் டி.டி.எச். விற்பனையை பெருக்க எங்கள் மீது அவதூறு பரப்புகின்றனர். ஆர்.சி.வி.,யில் சன் சேனல்கள் தெரியாததற்கு அந்நிறுவனமே பொறுப்பு. அவர்கள் மட்டும் இந்த தொழிலை நடத்த வேண்டும் என நினைக்கின்றனர். இவர்கள் இதை அரசியலாக்குகின்றனர்.
ஒரு தொழிலை இன்னொருவர் செய்யக் கூடாதா?. ஒருவர் வாழ 99 பேர் சாக முடியாது என்றார் அழகிரி.