கார்கள் மீதான வரி அதிகரிப்பு-விலைகள் சர்..!
டெல்லி: மத்திய ரக மற்றும் பெரிய கார்கள் மீது கூடுதலாக ரூ. 20,000 வரை மத்திய அரசு உற்பத்தி வரியை அதிகரித்துள்ளது. இதனால் இந்த கார்களின் விலை உயரவுள்ளது.
கார்கள் மீது ஏற்கனவே 24 சதவீத உற்பத்தி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையி்ல் அதிக அளவில் எரிபொருளை பயன்படுத்தும் கார்கள் மீது இந்த கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.
1500 சி.சி. திறன் என்ஜின் கொண்ட மத்திய ரக கார்களுக்கு ரூ.15,000மும் 2000 சி.சி. திறன் என்ஜின் கொண்ட பெரிய கார்களுக்கு ரூ.20,000 கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரும்பு விலை உயர்வால் கார்களின் விலைகள் உயர்த்தப்பட இருந்தன. இந் நிலையில் கூடுதல் வரியையும் போட்டுத் தாக்கியுள்ளது மத்திய அரசு.
இந்த வரி உடனடியாக அமலுக்கு வருவதால் பெரிய கார்களின் விலை ரூ. 25,000 முதல் ரூ. 35,000 வரை உடனடியாக உயரவுள்ளது.
குறிப்பாக மாருதி எஸ்எக்ஸ்4, ஹோண்டா சியல், ஹூயுண்டாய் வெர்னா, ஹோண்டா அகார்ட், ஹோண்டா ரிவிக், ரேனால்ட் லோகன், ஸ்கோடா, டாடா சபாரி, மகிந்திரா ஸ்கார்ப்பியோ, பொலீரோ, டயோட்டா இன்னோவா ஆகியவற்றின் விலை உயரப் போகிறது.
அதே நேரத்தின் இரும்பின் விலையை குறைக்கும் வகையில் இரும்புத் தாது மீதான ஏற்றுமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உள் நாட்டு பயன்பாட்டுக்கு இந்த பொருட்கள் தாராளமாக கிடைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.