ஸ்டாலின்-கலாநிதி மாறன் லண்டனில் சந்திப்பு?
தனது சொந்த விமானத்தில் இங்கிலாந்து சென்ற கலாநிதியுடன் அவரது மனைவியும் உடன் சென்றுள்ளார். லண்டனில் இவர்கள் ஸ்டாலினை சந்தித்துப் பேசக் கூடும் என்று தெரிகிறது.
திமுகவில் இப்போது அழகரியின் கை ஓங்கி வருவதாகவும் ஸ்டாலின் ஒதுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
முதல்வர் கருணாநிதி மற்றும் குடும்பத்தாருக்கும் கலாநிதி-தயாநிதி ஆகியோருக்கும் இடையே மீண்டும் நல்லுறவை உருவாக்க ஸ்டாலின் முயன்று வந்தாலும் அதற்கு அழகிரி தரப்பு முட்டுக் கட்டை போட்டு வருகிறது.
அழகிரிக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுக்கும் முயற்சிகளை ஸ்டாலி்ன் தரப்பு தடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. அதே போல ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி தர விடாமல் அழகிரி தரப்பு தடுப்பதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் தான் சில காலமாகவே சென்னையில் இருப்பதை தவிர்த்து வருகிறார் ஸ்டாலின். திமுக பொதுக் குழுக் கூட்டத்துக்கு முன் பெங்களூரில் இருந்த அவர் கடைசி நேரத்தில் தான் திரும்பி வந்தார்.
கடலூரில் மகளிர் அணி மாநாடு நடக்கவிருந்த நிலையில் உடல் நிலையை சுட்டிக் காட்டி சிகிச்சை பெறுவதற்காக என்று சொல்லிவிட்டு லண்டன் சென்றுவிட்டார்.
மகளிரணி மாநாட்டில் கனிமொழியுடன் அழகிரியின் மகள் கயல்விழியும் மேடையேறுவதையும், அவரும் நேரடியாக அரசியலுக்கு வருவதையும் ஸ்டாலின் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் தனது லண்டன் பயணத்தை நீட்டித்த அவர், தனது குடும்பத்தினரை யாரையும் கூட (ஸ்டாலினின் மகன் உதயநிதி சென்னையில் தான் இருந்தார்) மகளிரணி மாநாட்டில் பங்கேற்கச் செய்யவில்லை. அழகிரி-கனிமொழி தரப்புக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டதால் மாநாட்டை ஸ்டாலின் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் அழகிரி ராயல் கேபிள் விஷனை ஆரம்பித்து மாறன் சகோதரர்களுடன் அடுத்தகட்ட மோதலை துவக்கிவிட்டார். இரு தரப்பும் டிராய், நீதிமன்றம் என்று போய்க் கொண்டுள்ள நிலையில் மாறன் சகோதரர்களுக்கு ஸ்டாலின் ஆதரவாக உள்ளதாகக் கருதப்படுகிறது.
இந் நிலையில் ஸ்டாலினுடன் லண்டன் சென்ற அவரது மனைவி துர்கா, உதவியாளர் ராஜா ரவிசங்கர் ஆகியோர் இன்று அதிகாலை 3 மணியளவில் சென்னை திரும்பிவிட்டனர். ஆனால், ஸ்டாலின் வரவில்லை.
ஸ்டாலின் எப்போது திரும்புவார் என்று தெரியவில்லை. இந் நிலையில் கலாநிதி மாறன் லண்டன் விரைந்திருக்கிறார். உடன் அவரது மனைவி காவிரியும் சென்றிருக்கிறார். இருவரும் ஸ்டாலினை சந்திக்கலாம் எனத் தெரிகிறது.
அழகிரிக்கு முக்கியத்துவம் தரப்படும் நடந்த கடலூர் மாநாட்டை ஸ்டாலின் புறக்கணித்துள்ள நிலையில், கலாநிதி மாறன் அவரை சந்திக்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.