'உம்னோ' தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டி: படாவி
மலேசிய அரசின் நிர்வாகத் தலைநகரான புத்ரஜெயாவில் செய்தியாளர்களிடம் படாவி பேசுகையில் இதைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், உம்னோ தலைவர் பதவிக்கு டிசம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் நான் கண்டிப்பாக போட்டியிடுவேன். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.
பிரதமர் பதவியிலிருந்தும், தலைவர் பதவியிலிருந்தும் விலகும் எண்ணம் என்னிடம் இல்ைல.
மேலும், துணைப் பிரதமர் நஜீப் துன் ரஸ்ஸாகிடம் பிரதமர் பொறுப்பை ஒப்படைக்க எந்தக் காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை. இதுதொடர்பாக எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. இப்போதைக்கு அதுபோன்ற எந்தத் திட்டமும் என்னிடம் இல்லை என்றார் படாவி.
கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் படாவி தலைமையிலான உம்னோ கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இதையடுத்து படாவி விலக வேண்டும் என்று கட்சிக்குள் நெருக்குதல்
நிலவி வருகிறது. இருப்பினும் தொடர்ந்து படாவி மறுத்து வருகிறார்.
இந்த நிலையில் டிசம்பர் மாதம் உம்னோ தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் படாவி வெற்றி பெறுவார் எனக்கூறப்படுகிறது. மேலும் பிரதமர் பதவியிலும் படாவியே நீடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் டிசம்பருக்குப் பின்னர் பிரதமர் பதவியை துணைப் பிரதமர் ரஸ்ஸாக்கிடம் படாவி ஒப்படைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.