என்.எல்.சி. ஒப்பந்த ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
நெய்வேலி: பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து என்.எல்.சி. ஒப்பந்த ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கடந்த 2ம் தேதி என்.எல்.சி. ஒப்பந்த ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். பணி நிரந்தரம், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் தொடங்கியது.
பல்வேறு கட்டங்களில்நடந்த பேச்சுவார்த்ைதகள் தோல்வி அடைந்தன. இந்த நிலையில் மத்திய நிலக்கரித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் பொக்ராடியா தலைமையில்கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் ஒப்பந்த ஊழியர்களில் 5000 பேரை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக்குவது என்றும், பணி மூப்பு அடிப்படையில் அவர்களை படிப்படியாக நிரந்தரமாக்குவது என்றும், நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல ஒப்பந்த ஊழியர்களுக்கும் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட சலுகைகளைத் தருவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இருப்பினும் இவற்றை சட்டப்பூர்வமாக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியது. ஆனால் பணி நிரந்தரம் தொடர்பான கோரிக்கையை சட்டப்பூர்வாக ஒப்பந்தத்தில்கொண்டு வருவதில்சிக்கல் இருப்பதாக நிர்வாகத்தின் தரப்பில்கூறப்பட்டது.
இதை தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை. குறிப்பாக ஜீவா ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சட்டப்பூர்வமான ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியது.
இதையடுத்து மத்திய தலைமை தொழிலாளர் ஆணையர் முகோபாத்யாயா முன்னிலையில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் இறுதியில், இரவு 11 மணியளவில் உடன்பாடுஏற்பட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஊழியர் சங்கங்கள் ஒப்புக் கொண்டன.
இதைத் தொடர்ந்து வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாகவும், உடனடியாக ஊழியர்கள் பணிக்குத் திரும்புவதாகவும் தொழிற்சங்கத் தலைவர்கள் அறிவித்தனர்.
இதன் மூலம் கடந்த 15 நாட்களாக நடந்து வந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. இன்னும் நான்கைந்து நாட்களில் மின் உற்பத்தி வழக்கமான நிலையை அடையும் எனத்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.