கூட்டணி 'டமால்': திமுக-பாமக வெடி போட்டு, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சென்னை: கூட்டணி முறிந்ததாக திமுக அறிவித்ததை பாமகவினர் இனி்ப்பு வழங்கி கொண்டாடினர். அதே போல திமுகவினரும் பாமக போனதை வெடி போட்டு கொண்டாடினர்.'இனிமேல்தான் நம் அரசியல் எதிர்காலம் பிரகாசமாய் இருக்கப் போகிறது' என்று கூறியபடி பாமகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் தொண்டர்களும் உற்சாகமாய்க் கூறியபடி ஆடினர்.
சிலர் உற்சாக மிகுதியில் கிலோ கிலோவாக இனிப்புகளை வாங்கி சக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினர். சென்னையிலிருந்து வெளியூர் சென்ற பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
அண்ணா அறிவாலயத்துக்கு எதிரிலுள்ள தெருக்கள் மற்றும் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் தேனாம்பேட்டையின் பெரும்பாலான பகுதிகளில் பாமக சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன. சில குறும்புக்கார தொண்டர்கள் திமுகவினருக்கே இனிப்பு வழங்கி கடுப்படித்தனர்.
இதேபோல, பண்ருட்டி, விழுப்புரம், செஞ்சி பகுதிகளில் உள்ள பாமகவினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் இந்த உறவு முறிவைக் கொண்டாடினார்கள்.
திமுகவினரும் தங்கள் பங்குக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் பாமக இடத்தை காலி செய்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
கூட்டணி உடைந்ததற்காக இப்படி ஒரு கொண்டாடம் நடந்தது உலகிலேயே இது தான் முதல் முறையாக இருக்க வேண்டும் எனத் தெரிகிறது.