லண்டனிலிருந்து சென்னை திரும்பினார் ஸ்டாலின்
அவர் ஊரில் இல்லாத நிலையிலேயே கட்சியின் உயர் நிலைக் கூட்டம் நடந்து பாமகவுடனான கூட்டணியை திமுக முறித்துக் கொண்டதும், அதே போல திமுக மகளிரணியின் முதல் மாநாட்டை ஸ்டாலின் புறக்கணித்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலின் கடந்த 15 நாட்களுக்கு முன் லண்டன் சென்றார். அவர் முதுகு வலிக்காக சிகிச்சை பெற சென்றதாகக் கூறப்பட்டது.
இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் மூன்று முக்கிய நிகழ்ச்சிகள் நடந்து முடிந்துவிட்டன. புதிய சட்டசபை அடிக்கல் நாட்டு விழா, கடலூர் திமுக மகளிர் மாநாடு, பாமகவை நீக்கும் முக்கிய முடிவை எடுத்த திமுக உயர் நிலை செயல் திட்டக்குழுக் கூட்டம். இந்த மூன்றிலும் ஸ்டாலின் பங்கேற்கவில்லை.
கடலூர் மாநாட்டில் அழகிரியின் மகள் கயல்விழியை திமுக நேரடியாக அரசியலில் களமிறக்கியது. இதற்கு அழகிரிக்கு கனிமொழியின் ஆதரவும் இருந்தது. இதனால் இந்த மாநாட்டை ஸ்டாலி்ன் புறக்கணிக்க முன்பே திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் தான் அழகிரியுடன் நேரடி மோதலில் இறங்கியுள்ள சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் ஸ்டாலினை சந்திப்பதற்காக தனது சொந்த விமானத்தில் லண்டன் சென்றார்.
இந் நிலையில் ஸ்டாலின் இன்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவரை வரவேற்றனர்.