அணு ஒப்பந்தம்: 25ம் தேதி வரை மத்திய அரசுக்கு இடதுசாரிகள் கெடு
டெல்லி: அணு சக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு மத்திய அரசுக்கு ஜூன் 25ம் தேதி வரை அவகாசம் உள்ளது. அதற்குள் மத்திய அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், மத்திய அரசுக்கு தந்து வரும் ஆதரவை நிச்சயம் மறு பரிசீலனை செய்வோம் என்று இடதுசாரிக் கட்சிகள் எச்சரித்துள்ளன.
இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்பது இடதுசாரி கட்சிகளின் நிலை. ஆனால், அணு சக்தி ஒப்பந்தத்தை நிச்சயம் நிறைவேற்றியே தீருவது என்ற உறுதியான நிலையில் இருக்கிறது மத்திய அரசு.
இருப்பினும் இடதுசாரிகளின் ஆதரவையும் இந்த விஷயத்தில் பெற வேண்டும் என திமுக உள்ளிட்ட பல கூட்டணிக் கட்சிகள், மத்திய அரசை அறிவுறுத்தியும், வலியுறுத்தியும் வருவதால் இடதுசாரிகளை சமரசப்படுத்தி சம்மதம் பெற மத்திய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால் இடதுசாரிகளின் நிலையில்எந்தவித மாற்றமும் இல்லை.
இந்த நிலையில், நேற்று முன்தினம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டுக் கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால் இடதுசாரிகளின் நிலையால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சி, இக்கூட்டத்தை ஜூன் 25ம் தேதிக்கு தள்ளி வைத்து விட்டது.
இந்த நிலையில், தங்களது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. மத்திய அரசுதான் தனது மனதைமாற்றிக் கொண்டு, அணு சக்தி ஒப்பந்தத்தை கைவிட வேண்டும். அதற்கு அவர்களுக்கு ஜூன் 25ம் தேதி வரை அவகாசம் உள்ளதாக இடதுசாரிகள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரி கூறுகையில், 25ம் தேதி வரை அவர்களுக்கு அவகாசம் உள்ளது. அதற்குள் தங்களது மனதை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை நாங்கள் நிச்சயம் மறு பரிசீலனை செய்வோம்.
அதைத் தவிர எங்களுக்கு வேறுவழியில்லை. அதன் பின்னர் எந்தப் பேச்சுவார்த்தையாலும் பலன் இருக்காது என்பதை மத்திய அரசு உணர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதே கருத்தைத்தான் இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்ட் பிளாக், புரட்சிகர சோசலிஷ கட்சி ஆகியவையும் கொண்டுள்ளன.
ஆனால் மத்திய அரசைப் பொறுத்தவரை எப்பாடுபட்டாவது அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றிட தீவிரமாக உள்ளது. எனவே 25ம் தேதி நடக்கவுள்ள ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் எந்த உடன்பாடும் ஏற்படாது, இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெறுவது உறுதி என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மத்திய அரசு கவிழுமா, இடைத் தேர்தல் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசை அவசரப்பட வேண்டாம் என வலியுறுத்தக் கோரி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மத்திய விவசாயத்துறை அமைச்சருமான சரத் பவாரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிரகாஷ் காரத் இன்று சந்தித்து கோரிக்கை விடுத்தார்.