பண வீக்கம் பயங்கரம்: 11.05% ஆக உயர்வு!
டெல்லி: பண வீக்க விகிதம் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவாக 11.05 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நாட்டின் பண வீக்க விகிதம் சமீபகாலமாக கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. உயர்ந்து வரும் விலைவாசி, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவையே இதற்கு முக்கிய காரணம்.
கடந்த வாரம் பண வீக்க விகிதம் 8.75 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில் ஜூன் 7ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இது 11.05 சதவீதாக எகிறியுள்ளது.
இது கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிலான உயர்வாகும். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாகவே பண வீக்கம் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மே 10ம் தேதி பண வீக்கம் 7.82 சதவீதமாக இருந்தது. 17ம் தேதி 8.1 சதவீதமாக உயர்ந்தது. 24ம் தேதி 8.24 சதவீதமாகவும், 31ம் தேதி 8.75 சதவீதமாகவும் உயர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நான் அப்போதே சொன்னேன்- சிதம்பரம்:
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பெட்ரோல்-சீடல் விலை உயர்வு குறித்து முடிவெடுக்க கேபினட் கூடியபோதே, இந்த விலையை உயர்த்தினால் பணவீக்கம் இரட்டை இலக்கத்தைத் தாண்டும் என எச்சரித்தேன். அது தான் இப்போது நடந்துள்ளது.
இப்போது பணவீக்கம் உயர்ந்ததற்கு 94 சதவீதம் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு தான் காரணம்.
இதைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம் என்றார் சிதம்பரம்.
அதற்காக பெட்ரோல் விலையை மத்திய அரசு குறைக்கும் என யாரும் நினைத்துவிட வேண்டாம். சந்தையில் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வேலைகளில் மத்திய அரசு இறங்கும்.
முதல்கட்டமாக வங்கிகளின் சி.ஆர்.ஆர். (cash reserve ratio) விகிதம் உயர்த்தப்படலாம். அப்படி நடந்தால் வங்கிகள் வசமுள்ள நிதியில் ஒரு பகுதி ரிசர்வ் வங்கியில் போய் முடங்கும்.
இதனால் வங்கிகள் வீட்டுக் கடன், வாகன கடன், பர்சனல் லோன் என மக்களுக்கு கடன் தருவதைக் குறைக்கும். அப்படி நடந்தால் சந்தையில் பணப் புழக்கம் குறையும், அதன் தொடர்ச்சியாக பண வீக்கம் குறையும் என்பது பொருளாதார விதி.
நடக்குமோ?!