அணு ஒப்பந்தம் நிறைவேறாவிட்டால் ராஜினாமா செய்வேன்: பிரதமர்
இரு ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை நிறைவேற்றி முடிக்குமாறு இந்தியாவை தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறது அமெரிக்கா. ஆனால் கூட்டிக்குள் இருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் இந்த ஒப்பந்தம் இந்தியாவின் இறையாண்மைக்கு வேட்டு வைத்துவிடும் எனக் கூறி கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
தங்கள் எதிர்ப்புகளையும் மீறி இந்த ஒப்பந்தத்தை மன்மோகன் சிங் அரசு நிறைவேற்றினால் கூட்டணியிலிருந்து விலகி அரசைக் கவிழ்த்துவிடுவோம் என கம்யூனிஸ்டுகள் எச்சரித்துள்ளனர்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, இடது சாரிகளை முடிந்தவரை சமாளிப்பது, இல்லையேல் முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி ஆதரவை நாடுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
இந்நிலையில், ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாமல் அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாவதை விட என் பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன். நிலைமையை நீங்களே சமாளித்துக் கொள்ளுங்கள் என வெளிப்படையாகவே இன்று அறிவித்துள்ளார் பிரதமர் மன்மோகன்சிங்.
கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் ஒரு பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டி:
இந்த ஒப்பந்தம் மிக நம்பகத் தன்மையுள்ளது. நாணயமானது. இதை நிறைவேற்றுவதுதான் புத்திசாலித்தனம். எதிர்ப்பவர்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இந்த ஒப்பந்த்தத்துக்கு கணிசமான ஆதரவிருக்கிறது, என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, உடனடியாக களமிறங்கிய சோனியா காந்தி கூட்டணிக் கட்சிகளின் அவசர கூட்டத்தை நேற்று இரவு கூட்டினார். இக்கூட்டத்தின் முடிவில் எந்த எதிர்ப்பு வந்தாலும், இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது என முடிவெடுக்கப்பட்டது. கம்யூனிஸ்டுகள் தவிர பிற கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இம்முடிவுக்கு ஆதரவளித்துள்ளன.
--