எந்த நிமிடமும் ராஜினாமா செய்ய தயார்-அன்புமணி
இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது:
பாமகவுக்கோ அதன் நிறுவனரான அய்யாவுக்கோ பதவியோ புகழோ பெரிதல்ல. கொண்ட கொள்கைதான் முக்கியம். அய்யாவை தேடி வந்த பதவிகள் ஏராளம். அனால் அவர் எதையுமே விரும்பியதில்லை.
நாம் எல்லோருமே எப்போதுமே போராளிகளாக களத்தில் நிற்பவர்கள். பதவி நமக்கு ஒரு சுமைதான்.
மணல் கொள்ளை, கல்விக் கொள்ளை, மதுக் கடைகள் மூலம் பாட்டாளி மக்களிடம் அரசு அடிக்கும் கொள்ளை, சிறப்புப் பொருளாதார மண்டலம் எனும் பெயரில் விவசாயிகளிடம் அடிக்கும் கொள்ளை என பலவற்றை எதிர்த்து தொடர்ந்து களத்தில் போராடுபவர்கள் நாம்.
நம்மைப் போன்ற கொள்கைவாதிகளின் கூட்டணியை முறித்துக் கொண்டதால் இழப்பு நமக்கல்ல, திமுகவுக்குத்தான்.
எனக்கு பதவி முக்கியமல்ல. இந்தப் பதவியை எனக்குத் தரும்போதே அய்யா சொன்னார்: ஒரு வருடம்தான் பார்ப்பேன், நீ சரியாக செயல்படாவிட்டால் வேறு யாருக்காவது இதைக் கொடுத்துவிடுவேன் என்று.
அய்யா சொன்னால் அடுத்த நொடியே நானும் வேலுவும் பதவி விலகத் தயார் என்றார் அன்புமணி.