மன்மோகன் சிங் ராஜினாமா செய்வதாக கூறவில்லை: காங். மறுப்பு
டெல்லி: அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாவிட்டால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக மன்மோகன் சிங் கூறவில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
அணு சக்தி ஒப்பந்த விவகாரம் அரசியல் சூட்டைக் கிளப்பி இடைத் தேர்தல் வந்து விடுமோ என்ற எதிர்பார்ப்பை ஏகத்திற்கும் ஏற்படுத்தி வைத்துள்ளது.
இந்த நிலையில், அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாவிட்டால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம், மன்மோகன் சிங் கூறியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் காங்கிரஸ் கட்சி இதை மறுத்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒப்பந்தத்தை அமல்படுத்தும் அதே நேரத்தில், அரசும் நிலையாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.
தேசிய நலனுக்கான ஒப்பந்தம் இது. இதை இடதுசாரிகளின் சம்மதத்துடன் அமல்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது. இந்தப் பிரச்சினையில், ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நீங்குவதற்கு, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஒருவேளை ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் தோல்வி ஏற்பட்டால் அதனால் மத்திய அரசுக்கு தலைக்குனிவு எதுவும் ஏற்படாது என்றுதான் பிரதமர் கூறியுள்ளார். ராஜினாமா செய்வதாக அவர் சொல்லவில்லை என்றார் ஷகீல் அகமது.
அதே போல பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் இடதுசாரிகள் கோரியுள்ளன.