ஓபாமாவைப் போல நானும்..: விஜயகாந்த்
சென்னை: அமெரிக்க அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள பாரக் ஓபாமாவைப் போல தமிழகஅரசியலிலும் பெரும் மாற்றத்தை நான் ஏற்படுத்துவேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். அதில், நிறவெறி காரணமாக காலம் காலமாய் வெள்ளையர்களுக்கும், கறுப்பர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டு.
ஆனால், அமெரிக்காவின் முதல் கறுப்பர் இன அதிபராகி புதிய வரலாற்றை பாரக் ஒபாமா படைக்க இருக்கிறார். அதுபோல தமிழகத்தில் நானும் மாற்றத்தை கொண்டு வருவேன்.
தற்போது தேவைப்படுவதெல்லாம் மாற்றம் தான். நிச்சயம் அது நிகழும். தற்போது தேர்தலில் போட்டியிட மட்டுமே நான் விரும்புகிறேன். கடந்த சட்டமன்ற தேர்தலை போல் அல்லாமல் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கண்டறிந்து அதில் தேமுதிகவின் பலத்தை அதிகரிக்க கடுமையாக பாடுபட்டு வருகிறோம்.
மூன்றிலிருந்து ஐந்து தொகுதிகளை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 2 தொகுதிகளில் வென்றால் கூட தேமுதிகவுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கும்.
தேர்தலில் தனித்து போட்டி என்பது என்னுடைய தற்போதைய நிலை. இதில் மாற்றம் ஏற்படவும் செய்யலாம். பல்வேறு கட்சிகளிலிருந்து கூட்டணி அமைத்துக் கொள்ள எனக்கு தூது விடுகிறார்கள். ஆயினும் தனித்து போட்டி என்பதுதான் இப்போதைக்கு என்னுடைய நிலையாகும்.
தேசிய அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை. சட்டமன்ற தேர்தல் மட்டுமே என்னுடைய இலக்கு. இது 2011ல் வந்தாலும் சரி அல்லது அடுத்த ஆண்டிலேயே வந்தாலும் சரி.
அடுத்த முதலமைச்சர் நான் தான் என்று சொன்னால் மற்றவர்கள் கேலியாக பார்க்கிறார்கள். ஆனால் இவ்வாறு சொல்வதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.