For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடும்ப தொல்லையை தவிர்க்க கருணாநிதி ஆய்வு கூட்டம்: ஜெ

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: குடும்பத்தினரின் தொல்லையை தவிர்க்க பொழுது போக்கிற்காகவே முதல்வர் கருணாநிதி ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக துறைவாரியாக அமைச்சர்கள்- அதிகாரிகளுடன் முதல்வர் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி திட்டங்களின் அமலாக்கல் குறித்தும், அதன் முன்னேற்றம், தடைகள் ஆகியவை குறித்து விளக்கம் கேட்டு வருகிறார்.

தாமதமாகி வரும் பணிகளை முடுக்கிவிடவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார். இந் நிலையில் ஊட்டியில் தோழி சசிகலாவுடன் இன்னும் கோடை விடுமுறை ஓய்வில் இருக்கும் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை,

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை, திமுகவினரின் தொடர் தலையீடு காரணமாக பெரும்பாலான அரசுத் துறைகள் அலங்கோலமாகக் காட்சியளிக்கின்றன.

ஏழை, எளிய மக்களின் உயிர்களை காக்கக்கூடிய மருத்துவமனைகளையும் திமுகவினர் விட்டு வைக்கவில்லை. பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் எனது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதும், நவீன கருவிகளுடன் கூடிய மூன்றாயிரம் படுக்கை வசதிகள் கொண்ட ஆசியாவின் மிகப்பெரியதுமான சென்னை அரசு பொது மருத்துவமனை, தற்போது பராமரிப்பு இல்லாமல் இருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

நர்ஸ்களே சிகிச்சை அளிக்கும் நிலைமையும், அலுவலக உதவியாளர்களே நோயாளிகளுக்கு மாத்திரைகளை தரும் அவல நிலையும், மாத்திரைகள் இருப்பில் இல்லாத நிலையும் காணப்படுகிறது.

இதற்கு காரணம், மருத்துவமனையை பராமரிக்கிற பணி, மாநகராட்சி கவுன்சிலர் ஒருவருக்கு வேண்டியவரின் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வருகின்றன.

இந்த புதிய நிறுவனம் மிகவும் குறைந்த பணியாளர்களை வைத்தே பராமரிப்புப் பணிகளை செய்து வருவதாகவும், மருத்துவமனையை சுத்தம் செய்வதற்குரிய பொருட்களை மருத்துவமனை நிர்வாகம் தருவதில்லை என்றும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

சென்னை அரசு பொது மருத்துவமனைக்கே இந்த கதி என்றால், மாவட்டங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் கதி எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

ஆனால், மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை ஆய்வுக் கூட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் மருந்தோ, டாக்டரோ இல்லாமல் உயிரிழப்பு ஏற்பட்டால் அது எனக்கு அவமானம் என்று உணர்ச்சி பொங்க, உருக்கமாக பேசிய கருணாநிதிக்கு சென்னை அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் நீடிக்கும் அவலநிலை குறித்து அதிகாரிகள் ஏதும் தெரிவிக்கவில்லை போலும்.

ஒருவேளை வீட்டில் இருந்தால் குடும்ப உறுப்பினர்களின் தொல்லை அதிகமாக இருக்கும் என்பதால் பொழுது போக்கிற்காக, ஆய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த முதல்வருக்கு நாம் ஏன் தொந்தரவு கொடுக்க வேண்டும் என்று நினைத்து அதிகாரிகள் மெளனமாக இருந்துவிட்டார்கள் போலும்.

இனிமேலாவது பொழுதுபோக்கிற்காக ஆய்வுக் கூட்டங்களை நடத்தாமல் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X