மதவாத சக்திகளுக்கு இடம் கொடுத்து விடாதீர்: இடதுசாரிகளுக்கு கருணாநிதி
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரி கட்சிகளுக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் இடையே இழுபறி நீடித்து வருகிறது. இதன் காரணமாக மத்திய அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை இடதுசாரி கட்சிகள் விலக்கிக் கொள்ளும் அபாயம் எழுந்துள்ளது.
இதையடுத்து முதல்வர் கருணாநிதி இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளார். இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார்.
அதில் ஒரு முயற்சியாக நேற்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா ஆகியோர் சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் பிரகாஷ் காரத் செய்தியாளர்களிடம் பேசுகையில், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, ஐ.ஏ.இ.ஏ. கூட்டத்திற்குப் போக மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். அக்கருத்தை முதல்வர் கருணாநிதியிடம் ெதரிவித்தோம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மிகுந்த மரியாதைக்குரிய முக்கிய தலைவர் என்ற முறையில், இதில் முதல்வர் கருணாநிதி தலையிட்டு மத்திய அரசின் போக்கை தடுத்து நிறுத்த முயல வேண்டும். இதன் மூலம் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண முடியும்.
பிரச்சினையைத் தீர்க்கும் வழிகளை யோசிக்குமாறும், மதவாத சக்திகளுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்றும் முதல்வர் எங்களைக் கேட்டுக் கொண்டார்.
இடதுசாரிகள்-ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒற்றுமை வலிமையுடன் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக முதல்வரிடம் விளக்கினோம்.
முதல்வர் தெரிவித்துள்ள யோசனைகள் குறித்து எங்களது கட்சியினருடன் பேசுவோம். அவரது யோசனைகள் குறித்து விசாரித்து விட்டு, தொடர்ந்து முதல்வரிடம் பேசுவோம் என்றார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தனது முழு ஆட்சிக்காலத்தையும் நிறைவு செய்யுமா அல்லது இடைத் தேர்தல் வருமா என்ற கேள்விக்கு காரத் பதிலளிக்கையில், அதுகுறித்து என்னால் எதுவும் கூற முடியாது என்றார் காரத்.
இந்த சந்திப்பின்போது மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, ராஜ்யசபா எம்.பி. கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர்.