கிரீமி லேயர்- வருமான வரம்பை அதிகரிக்க பரிந்துரை!
டெல்லி: கிரிமீ லேயர் பிரிவினருக்கான ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ. 4 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை உயர்த்தலாம் என தேசிய பிற்பட்டோர் ஆணையம் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
தற்போது கிரீமி லேயர் பிரிவினருக்கான வருமான உச்ச வரம்பு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆண்டுக்கு 2.5 லட்சம் ஊதியம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டின் பலன் கிடைக்காது என்ற நிலை உள்ளது.
இந் நிலையில் இந்த வருமான வரம்பை உயர்த்துமாறு ஆணையம் பரிந்துள்ளது.
இந்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, நாளை சமூக நீதித்துறை அமைச்சர் மீரா குமாரிடம் வழங்கப்படவுள்ளது.
மாநில பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையத்தின் கருத்துக்களின் அடிப்படையில் இந்த பரிந்துரைகளை தேசிய பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் உருவாக்கியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், மாநில பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கூட்டத்தை தேசிய ஆணையம் நடத்தியது.
இதுதவிர பொதுமக்களிடமிருந்தும் கருத்துக்களை தேசிய ஆணையம் பெற்றது.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஆனால் கிரீமி லேயர் எனப்படும் வசதி படைத்தோர் பிரிவை இட ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வர தடை விதித்து விட்டது.
இதை எதிர்த்து மத்திய அரசு அப்பீல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி செய்வதற்குப் பதில், கிரீமீ லேயர் பிரிவினரை நிர்ணயிக்கும் வருமான உச்சவரம்பை உயர்த்தலாம் என மத்திய அரசுக்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து கிரீமி லேயர் பிரிவை பகுப்பதற்கான விதிமுறைகளைத் திருத்த தேசிய பிற்பட்டோர் ஆணையத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
அதன் அடிப்படையில் தற்போது வருமான உச்சவரம்பை உயர்த்தி தேசிய பிற்பட்டோர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.