உயர்ந்தது 'ரெபா ரேட்', 'சி.ஆர்.ஆர்': வங்கி கடன் வட்டியும் உயரும்
முதல் கட்டமாக தன்னிடம் வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டியை (Repo rate-ரெபோ ரேட்) 0.5 சதவீதம் உயர்த்தியுள்ளது.
அதே போல வங்கிகள், ரிசர்வ் வங்கியில் போட்டு வைத்திருக்க வேண்டிய பண கையிருப்பு விகிதத்தையும் (சிஆர்ஆர்-cash reserve ratio) 0.50 புள்ளிகள் அளவுக்கு உயர்த்திவிட்டது. (இந்த உயர்வு தலா 0.25 புள்ளிகள் என்று இரு கட்டமாக அமலாகிறது).
இதன்மூலம் வங்கிகள் வசம் உள்ள நிதி புழக்கத்தை ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்திவிட்டது. இதன் காரணமாக தாங்கள் தந்துள்ள-தரவுள்ள கடன்கள் (லோன்கள்) மீதான வட்டியை வங்கிகள் உயர்த்தப் போகின்றன.
இதனால், வங்கிக் கடன்கள் வட்டி உயர்வதோடு, இனி எளிதாக கடன்களும் கிடைக்காது. இதன்மூலம் சந்தையில் பணத்தின் புழக்கம் கட்டுப்படுத்தப்படும்.
இப்போதைய இந்த ரெபோ ரேட், சிஆர்ஆர் விகித உயர்வு நடவடிக்கையால் இந்திய சந்தையிலிருந்து ரூ. 20,000 கோடி அளவுக்கு பணம் உறிஞ்சப்பட்டு, ரிசர்வ் வங்கியிடம் போய் முடங்கும்.
பணப் புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டால் பண வீக்கம் குறையும்.
(பணவீக்கம் என்பது சந்தையில் பணத்தின் அளவு அதிகமாகவும், அதற்கு ஈடான பொருட்களி்ன் அளவும், சப்ளையும் குறைவாகவும் இருப்பது தான்)
இதுவரை ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் 8.0 சதவீத வட்டிக்கு கடனை வாங்கி அதை நமக்கு கார், பைக், வீடு வாங்கவும், பர்சனல் லோனாகவும் தந்து வந்தன. இப்போது இந்த வட்டி விகிதம் 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால் வங்கிகளே அதிக வட்டிக்குத் தான் கடன் வாங்கப் போகின்றன.
இந்த வட்டி உயர்வை வாடிக்கையாளர்கள் தலையில் வங்கிகள் கட்டிவிடும். இதனால் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும்.
ஏற்கனவே வட்டி விகித அதிகரிப்பால் வீடுகள், கார், பைக், வாங்குவோரின் எண்ணிக்கை ஓரளவுக்கு குறைந்துவிட்டது. இதனால் ரியல் எஸ்டேட், வாகன உற்பத்தி நிறுவனங்கள் தேக்கத்தில் உள்ளன.
இப்போதைய உயர்வு இந்த தேக்கத்தை இன்னும் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.
இந்த சிஆர்ஆர் உயர்வு முதல் கட்டமாகத் தான் 8.25ல் இருந்து 8.50 ஆக உயர்ந்துள்ளது. அடுத்தகட்டமாக மேலும் 0.25 புள்ளிகள் உயர்த்தப்படவுள்ளது. இதனால் வங்கிகளின் வட்டி விகிதம் விரைவில் இரண்டாவது முறையாக மீண்டும் உயரும்.