கல்பாக்கம் அணு உலைக்கு பாதுகாப்பு கலன்!
சென்னையை அடுத்த கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் 2வது கட்டமாக ரூ.3,492 கோடி செலவில் அதிவேக ஈனுலை (Fast breeder reactor) அமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது 50 சதவீத கட்டிட பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த பணிகள் 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவடையும்.
இந்த நிலையில், அதிவேக ஈனுலையை சுற்றி ரூ.20 கோடி செலவில், பிரமாண்ட பாதுகாப்பு கவசத்தை (Safety Vessel) அமைக்கும் பணி நடந்தது.
இந்த பாதுகாப்பு கவச கலன் 13.5 மீட்டர் சுற்றளவும், 13.5 மீட்டர் உயரமும் 80 டன் எடையும் கொண்டதாகும். ராட்சத கிரேன் மூலம் இது தூக்கி வைக்கப்பட்டது.
இந்தப் பணியை முடிக்க கிட்டத்தட்ட 8 மணி நேரம் பிடித்தது. அடுத்த 3 மாத காலத்திற்குள் பாதுகாப்பு கலன் உள்ளே, முதன்மை கலன் மற்றும் உள் கலன் ஒன்றன்பின் ஒன்றாக பொருத்தப்படும்.
நேற்று நடந்த இந்தப் பணிகளை நிகழ்ச்சியில், இந்திய அணு சக்தி கழக தலைவர் அனில் ககோட்கர், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் பல்தேவ்ராஜ், இந்திய அணுமின் நிறுவனத் தலைவர் எஸ்.கே.ஜெயின், பாவினி தொழில் நுட்ப பிரிவு இயக்குனர் பிரபாகர், பாதுகாப்பு பிரிவு இயக்குனர் செல்லபாண்டி, திட்ட இயக்குனர் பிரபாத்குமார் ஆகியோர் நேரில் கண்காணித்தனர்.
இந்த ஈனுலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணி 2011ம் ஆண்டு தொடங்கும். இதன் மூலம் 500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். ஒரு யூனிட் மின்சாரம் 3 ரூபாய் 22 பைசாவில் கிடைக்கும். கனநீர் கொண்டு தயாரிக்கப்படும் மின்சாரத்தைவிட இங்கு 2 மடங்கு கூடுதல் மின்சாரம் இந்த முறையில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுனாமி தாக்குதல் காரணமாக ஈனுலையை நிர்மாணிக்கும் பணியில் இடையூறு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஈனுலையில் எரிபொருளாக புளுட்டோனியம் பயன்படுத்தப்படும். மற்ற வகைகளில் யுரேனியம்தான் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இந்திய அணுமின் நிறுவனத் தலைவர் எஸ்.கே.ஜெயின், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் பல்தேவ்ராஜ் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், அடுத்த ஐந்தாண்டு திட்டத்தில் புதிதாக 2 அதிவேக ஈனுலைகள் கல்பாக்கத்தில் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு அணு உலையும் 500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இதே போன்று மேலும் 2 ஈனுலைகள் வேறு இடங்களில் அமைக்கப்பட உள்ளன. அதற்கான இடம் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. அதன்பிறகு 1,000 மெகாவாட் தயாரிப்பு திறன்கொண்ட ஈனுலை அமைக்கப்படும்.
தற்போது அமைக்கப்பட்டு வரும் அதிவேக ஈனுலையில் 2011-ம் ஆண்டு மின்சாரம் தயாரிக்கும் பணி தொடங்கும். வணிக நோக்கத்தோடு முதன்முறையாக இந்த அதிவேக ஈனுலை அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 40 ஆண்டுகள் தொடர்ந்து மின்சாரம் பெறலாம்.
புரோட்டோ டைப் பாஸ்ட் பிரீடர் ரியாக்டர்' (பி.எப்.பி.ஆர்.) என்ற அதிவேக ஈனுலை தொழில்நுட்பம் மேலும் ஒரு படிக்கு நம்மை உயர்த்தும். இந்த அதிவேக ஈனுலை மூலம் மின்சாரம் தயாரிக்க தொடங்கும்போது உலக அரங்கில் இந்தியாவின் தரம் மேலும் பலமடங்கு உயரும் என்றனர்.