நானோ கார்களுக்கு அதிக வட்டியில் கடன் - வங்கிகள் முடிவு!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான நானோ கார்களை டாடா நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த ஆண்டின் இறுதியில் அது விற்பனைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் இந்தக் கார்களுக்கு எந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கலாம் என்பது குறித்த விவாதத்தில் வங்கிகள் ஈடுபட்டுள்ளன. தற்போது 19 சதவீத அளவுக்கு வட்டி விகிதத்தில் கடன் வழங்கலாம் என ஐசிஐசிஐ, எச்டிஎப்சி உள்ளிட்ட வங்கிகள் தீர்மானித்துள்ளன.
தற்போது புதிய கார்களுக்கு 14 சதவீதம் வரையிலும், பழைய கார்களுக்கு 22 சதவீதமும் வங்கிகள் கடன் தருகின்றன. ஆனால் இந்த வட்டி விகிதத்ைத விட நானோ கார்களுக்கு கூடுதல் வட்டியை வழங்க வங்கிகள் முடிவு செய்திருப்பதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.
மோட்டார் சைக்கிள்களை வங்கிக் கடன் மூலம் வாங்குவோர்தான் இதற்கு முக்கிய காரணம்.
மோட்டார் சைக்கிள்களுக்காக கடன் வாங்குவோரில் பெரும்பாலோர் அதை முறையாக திருப்பிச் செலுத்துவதில்லை. அவர்களிடம் கடன் தொகையை வசூலிக்க முடியாமல் வங்கிகள் திணறுகின்றன. இதனால், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் பல்வேறு வங்கிகளும், மோட்டார் சைக்கிள்களுக்கான கடனை நிறுத்தி விட்டன.
மேலும் ஆட்டோ டிரைவர்கள் பலரும் நானோவை வாங்கி கால் டாக்சியாக பயன்படுத்தும் திட்டத்தில் உள்ளனராம்.
மோட்டார் சைக்கிள்களை கடனில் வாங்கிய பலர் அதை கட்டாமல் லூசில் விட்டதைப் போல நானோ கார் விவகாரத்திலும் நடந்து கொண்டால் என்ன செய்வது என்ற அச்சம் வங்கிகளிடம் உள்ளது. எனவேதான் நானோ கார்களுக்கு அதிக வட்டியை தீட்ட வங்கிகள் தீர்மானித்துள்ளனவாம்.
மேலும், ஏற்கனவே மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கு, நானா வாங்க கடன் வழங்குவதில்லை எனவும் வங்கிகள் முடிவு செய்துள்ளனவாம். இதனால் அவர்களால் இரு கடன்களையும் கட்ட முடியாமல் போய் வங்கிகளுக்கு பாதிப்பு வருமே என்ற பயம்தான் இதற்குக் காரணம்.
அதேசமயம், ஏற்கனவே கார் வைத்திருப்பவர்கள், வசதி இருந்தும் கார் வாங்காமல் இருப்பவர்களுக்கு நானோ வாங்க முன்னுரிமை தரவும் வங்கிகள் தீர்மானித்துள்ளனவாம்.
நானோ கார் வாங்க கடன் கோரி வழங்கப்படும் விண்ணப்பங்களை படு தீவிரமாக பரிசோதித்து அதன் பின்னரே முடிவு எடுக்கவும் வங்கிகள் திட்டமிட்டுள்ளன.
வங்கிகள்தான் இப்படி பயந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தனியார் நிதி நிறுவனங்கள் (சேட்கள், மார்வாடிகள் உள்பட) படு குஷியாக இருக்கின்றனவாம். எப்போது நானோ காரின் இறுதி விலை வெளியாகும் என்பதை அறிய அவர்கள் ஆவலோடு உள்ளனராம்.
நானோ கார் குறித்த ஏக ஆர்வத்தோடும், எதிர்பார்ப்போடும் இருக்கும் பொது ஜனங்களுக்கு வங்கிகள் போடப் போகும் கிடுக்கிப் பிடிகள் கண்டிப்பாக சிரமத்தை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications