ஸ்பீட் பெட்ரோல் விற்கமாட்டோம்: 'பங்க்'குகள் எச்சரிக்கை
டெல்லி: அடுத்த மாதம் முதல் ஸ்பீடு, ப்ரீமியம் மற்றும் பவர் போன்ற உயர்ரக பெட்ரோல் விற்பனையை நிறுத்தி விடுவோம் என மத்திய அரசுக்கு, பங்க் உரிமையாளர்கள் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை உயர்த்தியது. அதன் பின்னர் பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளில் பிரீமியம் பெட்ரோல், ஸ்பீடு பெட்ரோல் போன்ற விலை கூடுதலான பெட்ரோல் மட்டுமே அதிக அளவில் விற்கப்பட்டு வருகிறது. சாதாரண பெட்ரோலை விட இவை லிட்டருக்கு ரூ.6 அதிகம் என்பதால் இதை விற்கவே அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனால் பல பங்குகளில் சாதாரண பெட்ரோல் கேட்டு வாகன ஓட்டிகள் முறையிடுவதும் அவர்களிடம் பங்கு ஊழ்யர்கள் மல்லுக்கு நிற்பதும் தொடர்கதையாகி வருகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் அதிக விலை உள்ள பெட்ரோலைத்தான் சப்ளை செய்வதாகவும், தாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்றும் பங்கு உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.
இன்னும் சில தினங்களுக்குள் சாதாரண பெட்ரோல் சப்ளை முழுவதுமாக நிறுத்தப்பட்டு விடும் என்றும் இப்போதே ஸ்பீடு பெட்ரோலுக்கு மாறிக் கொள்ளுங்கள் என்றும் பல பங்குகளில் அட்வைஸ் கொடுப்பதும் நடக்கிறது.
எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் இது பற்றி விசாரித்தபோது, யாருமே சரியான விளக்கம் தர முன் வரவில்லை.
இந் நிலையில் வாடிக்கையாளர்களின் நெருக்கடி தாங்க முடியவில்லை எனவும், கூடுதல் விலையுள்ள உயர் ரக பெட்ரோலுக்குப் பதில், வழக்கம் போல் சாதாரண பெட்ரோலை சப்ளை செய்யா விட்டால் அனைத்து வகை பெட்ரோல் விற்பனையையுமே நிறுத்தி விடுவோம் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அகில இந்திய பெட்ரோல்-டீசல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் நேற்று மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி முரளி தியோராவை சந்தித்து இதுகுறித்து முறையிட்டனர்.
பின்னர் கூட்டமைப்பின் தலைவர் அசோக் பத்வார் இது பற்றி நிருபர்களிடம் கூறியதாவது:
எண்ணை நிறுவனங்கள் 300 கிலோ லிட்டர் உயர் ரக பெட்ரோலும், அதே அளவுக்கு சாதாரண பெட்ரோலும் சப்ளை செய்கின்றன. அதாவது சாதாரண ரக பெட்ரோல் விற்கும் அளவுக்கு உயர்ரக பெட்ரோலை விற்க வேண்டும் (மொத்த விற்பனையில் 50 சதவீதம்) என்று எங்களைக் கட்டாயப்படுத்துகின்றன.
இந்த வகை பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை அதிக விலை உடையவை. அவற்றைத்தான் வாங்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளை நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது.
ஆகவே பெட்ரோலியத்துறை மந்திரியை சந்தித்து, வழக்கம் போல் சாதாரண ரக பெட்ரோல் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டோம். அடுத்த வாரம் எண்ணை நிறுவன அதிகாரிகளை வரவழைத்து இது பற்றி பேசுவதாகவும், ஓரிரு வாரங்களில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் எங்களிடம் உறுதி அளித்துள்ளார்.
50 சதவீதம் சாதாரண ரக பெட்ரோலும், 50 சதவீதம் உயர் ரக பெட்ரோலும் விற்க வேண்டும் என்ற ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்யாவிட்டால், அடுத்த மாதம் முதல் உயர் ரக பெட்ரோல் விற்பனையை நிறுத்தி விடுவோம் என்றார்.