கடும் பனிச்சரிவு: அமர்நாத் யாத்திரை ரத்து
ஜம்மு: கடும் நெரிசல், மழை மற்றும் பனிப் பொழிவு காரணமாக இந்த ஆண்டும் அமர்நாத் புனிதப் பயணம் ரத்து செய்யப்பட்டது.
ஏற்கெனவே 3 லட்சம் பயணிகள் அமர்நாத் பனி லிங்கக் கோயிலை நெருங்கிவிட்ட நிலையில் இப்பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பஹல்காம், பல்தால், ஜம்மு மற்றும் கந்தேர்பல் மாவட்ட முகாம்களில் பயணிகளின் நெரிசலால் மிக்க் கடுமையாக உள்ளதால், மேற்கொண்டு பயணிகளை வரவிடாமல் தடுத்து நிறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர் அதிகாரிகள்.
பஹல்காமையும் பல்தாலையும் இணைக்கும் சங்கம் பகுதியில் பனிப் பாறைகள் சரிந்து வழியை அடைத்துக் கொண்டிருப்பதால் அதற்கு மேல் பயணம் செய்ய வழியில்லாமல் இருபக்கமும் பயணிகள் தவிக்கின்றனர்.
தற்போது வழியில் சிக்கிக் கொண்டுள்ள பயணிகளுக்கு எந்த ஆபததும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால், பாதுகாப்புப் படை வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிகளுக்கு வேண்டிய வசதிகள் செய்து தருகின்றனர்.
அமர்நாத் பனிலிங்கக் குகைக் கோயில் கடல்மட்டத்திலிருந்து 12,500 அடி உயரத்தில் அமைந்த்துள்ளது. சமயத்தில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் அவதிப்படக் கூடிய கடுமையான பனிப் பிரதேசமான மத்திய இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் குகைக் கோயிலுக்கு ஆண்டு தோறும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் புனிதப் பயணம் மேற்கொள்கிறார்கள்.
பனிப் பாறைகள் நிறைந்த இந்த கடுமையான பாதையில் கிட்டத்தட்ட 50 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுதான் இந்தக் கோயிலைத் தரிசிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.