பீல்ட் மார்ஷல் மானக் ஷா மரணம்-பங்களாதேஷை விடுவித்தவர்
ஊட்டியில் உள்ள வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் நேற்றி்ரவு அவர் காலமானார். அவருக்கு வயது 94.
1971ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரை முன்னின்று நடத்தி பாகிஸ்தானையே உடைத்து பங்களாதேஷை விடுவிடுத்து தனி நாடாக்கிக் காட்டியவர் மானக் ஷா.
கடந்த பல ஆண்டுகளாகவே நுரையீரல் பிரச்சனையால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந் நிலையில் நேற்று காலை அவர் கோமா நிலைக்கு சென்றார். நள்ளிரவு 12.30 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.
பத்ம விபூஷன், மிலிட்டர் கிராஸ் உள்ளிட்ட நாட்டின் மிக உயரிய சிவிலியன், ராணுவ விருதுகளைப் பெற்ற மானக் ஷா, இந்திய ராணுவ வீரர்களால் சாம் பகதூர் என அன்புடன் அழைக்கப்பட்டவர்.
மிகச் சிறந்த போர் தந்திர நிபுணரான மானக் ஷா, பாகிஸ்தான் ராணுவத்தை 14 நாட்களில் நிலை குலைய வைத்தார். அந்தப் போரில் அவரே பிரன்ட் லைனில் நின்று நேரடியாக தாக்குதலை நடத்தினார்.
இந்திய ராணுவத்தின் மிகச் சிறந்த பிரிவான கூர்கா ரெஜிமெண்ட்டின் முதல் கமாண்டரும் அவர் தான். பின்னர் இந்திய ராணுவத்தின் பீல்ட் மார்ஷல் நிலைக்கு உயர்ந்தார்.
வீரத்துடன் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் தலை வணங்காத நெஞ்சமும் மிக கலகலப்பான சுபாவமும் கொண்டவர்.
1971ம் ஆண்டு டிசம்பரில் ராணுவத் தளபதியாக இருந்த மானக் ஷாவிடம், பாகிஸ்தானுடனான போருக்கு தயாரா என பிரதமர் இந்திரா காந்தி கேட்டபோது, மானக் ஷா சொன்ன பதில், "I am always ready sweetie".
கலகலவென சிரித்த இந்திராவிடம் அடுத்த பதினான்கே நாட்களில் வெற்றிக் கனியைத் தந்தார். கிழக்கு பாகிஸ்தானில் அந் நாட்டுப் படைகளை சரணடைய வைத்து அதை பின்னர் பங்களாதேஷாக மாற்றி விடுவித்தது இந்தியா.
பாகிஸ்தான் சரணடையும் நிகழ்ச்சியில் பங்கேற்க டாக்காவுக்கு செல்லுமாறு இந்திரா கூறியபோது, அதை மறுத்துவிட்ட மானக் ஷா, அவர்கள் என்னிடம் சரணடைய வேண்டாம்.. அந்த மரியாதை நமது ராணுவத்தின் கிழக்கு மண்டல கமாண்டர் ஜக்ஜித் சிங் அவுராவுக்கே கிடைக்க வேண்டும் என்று கூறிவிட்டவர் மானக் ஷா.
முன்னதாக நேரு பிரதமராக இருந்தபோது அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் எம்ஜிகே மேனன் இவரை ஓரங்கட்ட ஆரம்பித்தார். இதனால் மெதுவாக ஷா ஒதுங்கினார்.
ஆனால், அருணாச்சல பிரதேசத்தைக் கைப்பாற்றி சீனா ராணுவம் துவம்சம் செய்த நிலையில் ஷாவின் உதவியை தான் நாடினார் நேரு. மேலும் மேனனையும் ராஜினாமா செய்ய வைத்தார் நேரு.
இதையடுத்து அருணாச்சல் விரைந்த ஷா, வீரர்களை முடுக்கிவிட்டு சீனா மேலும் முன்னேறுவதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்திக் காட்டினார்.
1914ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி அம்ரிஸ்தரில் பார்ஸி குடும்பத்தில் பிறந்தவர் ஷா.
ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பின் தமிழகத்தில் செட்டில் ஆனார் ஷா. நீலகிரி மலையின் குன்னூரில் அவர் வசித்து வந்தார்.
தமிழக அரசு நிகழ்ச்சிகள் ரத்து:
மானக் ஷாவின் மறைவுக்க அஞ்சலி செலுத்தும் வகையி்ல், இன்று நடக்கயிருந்த தமிழக அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கோட்டையில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷாவி்ன் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.