திமுகவை விட அதிமுகவே 'பெட்டர்'- பாமக
தென்காசி: கூட்டணி, ஆட்சி என எல்லா விஷயங்களில் திமுகவை விட அதிமுகவே பெட்டர் என பாமக எம்பியும் முன்னாள் அமைச்சருமான ஏ.கே.மூர்த்தி கூறியுள்ளார்.
தென்காசியில் நிருபர்களிடம் பேசிய அவர்,
நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது தமிழகத்திற்கு மட்டும் 46 ரயில்வே மேம்பாலங்கள் கட்ட ரயில்வே துறை நிதி ஒதுக்கீடு செய்தது. ரயில்வே மேம்பாலத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பாதி, பாதி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் அதன் பின்னர் வந்த தி்முக அரசு ரயில்வே மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்வதில் அக்கறை காட்டவில்லை. சென்னையைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் மட்டும் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தது.
பாமகவை சேர்ந்தவர் ரயில்வே அமைச்சராக இருப்பதால், ரயில்வே மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தால் அது பாமகவிற்கு நல்ல பெயரை வாங்கித் தந்துவிடும் என்ற எண்ணத்திலேயே அரசு நிதி ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
மத்திய அமைச்சரவையில் பாமக வகிப்பது சின்ன மந்திரி பதவியைதான். வரும் 2011ம் ஆண்டிற்குள் தமிழகத்தில் முழுவதும் அகல ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். அதனைதான் ரயில்வே அமைச்சர் வேலு செயல்படுத்தி வருகிறார்.
மத்திய அமைச்சர்களாக காங்கிரஸ், திமுக, அதிமுக சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர். அப்போது ரயில்வே துறையை கேட்டுப் பெற்று தமிழகத்திற்கு நன்மை செய்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை.
மக்களுக்கு பணியாற்றவே ரயில்வே துறையை பாமக பெற்று சேவை செய்து வருகிறது. ரயில்வே துறையில் ரூ.10,000 கோடி கையிருப்பு உள்ளது. அதனால் ரயில்வேயின் எந்த திட்டத்திற்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் செய்வது கிடையாது. ஆஆனால், மாநில அரசு தான் ரயில்வே துறைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்காமல் இருக்கிறது.
மக்களவைத் தேர்தலில் கூட்டணி பற்றி டாக்டர் ராமதாஸ் முடிவெடுப்பார். அவர் முடிவு செய்யும் கூட்டணிதான் வெற்றி பெறும். இதனைதான் கடந்த 1996ம் ஆண்டு முதல் நடந்துள்ள மக்களவை தேர்தல்களிலும், 2001, 2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலும் காட்டுகிறது.
நல்ல முடிவை ராமதாஸ் எடுப்பார். புதுச்சேரி உள்ளிட்ட 40 எம்பி தொகுதிகளிலும் பாமக அமைக்கும் கூட்டணிதான் அமோக வெற்றி பெறும். அடுத்த சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி கனியை பறிக்கும்.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோது 28 சட்டசபை தொகுதிகளை பாமகவிற்கு ஒதுக்கீடு செய்தனர். அதில், 28 தொகுதிகளிலும் பாமக வெற்றி பெற்றது. திமுகவுடன் கூட்டணி வைத்தபோது 31 சட்டசபை தொகுதிகளை ஒதுக்கினர். இவற்றில் 18 தொகுதிகளில் தான் பாமக வெற்றி பெற்றது.
திமுகவினர் உள் வேலை பார்த்து எங்களை தோற்கடித்தனர். திமுகவை விட அதிமுக பெட்டர். இனி நாங்கள் ஏமாளி ஆக மாட்டோம். வெற்றிக் கூட்டணியை அமைப்போம் என்றார் மூர்த்தி.