காங்கிரஸுக்கு ஆதரவு குறித்து 3வது அணி ஜூலை 3ல் முடிவு
லக்னோ: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிப்பதுகு றித்து ஜூலை 3ம் தேதி நடைபெறும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி (3வது அணி) கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.
அணு சக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ள மத்திய அரசுமுடிவு செய்தால், ஆதரவு வாபஸ்ப பெறப்படும் என பிரகாஷ் காரத் அறிவித்துள்ள நிலையில், அனைவரின் கவனமும் சமாஜ்வாடி கட்சி மீது திரும்பியுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான அரசு கவிழாமல் காப்பாற்ற தற்போதைக்கு சமாஜ்வாடிக் கட்சியால் மட்டுமே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து லக்னோவில் இன்று செய்தியாளர்களிடம் முலாயம் சிங் யாதவ் பேசுகையில், காங்கிரஸுடன் எங்களுக்கு கொள்கை ரீதியாகவும், சிந்தனை ரீதியாகவும் பல முரண்பாடுகள் உள்ளன. இருப்பினும் மக்கள் உணர்வுகளுக்கு நாங்கள் மதிப்பளிப்போம். அதற்கேற்ப செயல்படுவோம்.
இதற்கு மேல் இப்போது எதுவும் சொல்வதற்கில்லை. ஜூலை 3ம் தேதி ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. அப்போது இதுகுறித்து விவாதித்து முடிவெடுப்போம்.
எனக்கும் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம் என்றார் முலாயம்.