தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக சீனிவாசன் வெற்றி
சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக என்.சீனிவாசன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் தலைவர் ஏ.சி.முத்தையா தோல்வி அடைந்தார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 78வது பொதுக்குழுக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தலும் நடைபெற்றது.
இந்த தேர்தலில் தற்போதைய தலைவரான சீனிவாசன் தலைமையில் ஒரு அணியும், முன்னாள் தலைவர் ஏ.சி.முத்தையா தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன. இதில் சீனிவாசன் அதிக வாக்குகளை பெற்று மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருடைய அணியில் இடம்பெற்றிருந்தவர்கள் மற்ற பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். சீனிவாசனுக்கு 134 வாக்குகளும், ஏ.சி.முத்தையாவுக்கு 55 வாக்குகளும் கிடைத்தன. செயலாளராக காசி விஸ்வநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 142 வாக்குகள் கிடைத்தன.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவரான சீனிவாசன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக தொடர்ந்து 7வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.