விமான எரிபொருள் விலை மேலும் உயர்வு- தடுமாறும் விமான நிறுவனங்கள்
மும்பை: விமானங்களுக்கான பெட்ரோல் (Aviation Turbine Fuel-ATF) விலை மேலும் 7 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒரு கிலோ லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 71,630.53 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே விமான எரிபொருள் விலை உயர்வால், நஷ்டத்தை சந்தித்து வரும் நிறுவனங்கள், விமான கட்டணத்தை ஒரு ரவுண்ட் உயர்த்தின. சில சேவைகளை நிறுத்தின.
இப்போது மேலும் விலை உயர்ந்துள்ளதால் விமான நிறுவனங்களின் நஷ்டம் மேலும் பல மடங்காக உயரவுள்ளது.
இந்த விலை உயர்வால் ஜெட் ஏர்வேஸின் குறைந்த கட்டண விமான சேவையான ஜெட் லைட் விமான நிறுவனம் 10 விமானங்களை தரையிறக்கிவிட்டு, சேவைகளை ரத்து செய்துவிட்டது. வளைகுடாவுக்கு தொடங்க இருந்த சேவைகளையும் ஒத்தி வைத்துவிட்டது.
அதே போல கிங் பிஷ்ஷர் நிறுவனம் தனது வெளிநாட்டு விமான சேவையை தொடங்குவதை ஒத்தி வைத்துவிட முடிவு செய்துள்ளது. மேலும் செலவை குறைப்பதற்காக தனது நிறுவனத்தில் பணியாற்றும் வெளிநாட்டு பைலட்டுகளின் காண்ட்ராக்டை புதுப்பிப்பதில்லை என்ற முடிவையும் எடுத்துள்ளது.
கோ ஏர் விமான நிறுவனம் செலவைக் குறைக்க தனது ஊழியர்களின் எண்ணிக்கையை 10 சதவீதம் குறைக்க திட்டமிட்டுள்ளது.