லாரி உரிமையாளர்கள்-அரசு பேச்சு தோல்வி
நேற்று நள்ளிரவில் தொடங்கிய லாரி ஸ்டிரைக்கால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. விலைவாசியும் மிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலும், லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கவும், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதில், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் மற்றும் அகில இந்திய போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாட்டின் நலன் கருதியும், பொதுமக்களின் நலன் கருதியும் ஸ்டிரைக்கை உடனடியாக வாபஸ் பெறுமாறு டி.ஆர்.பாலுகோரிக்கை விடுத்தார். உங்களது கோரிக்கைகள் முன்னுரிமை கொடுத்து பரிசீலிக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேசுகையில், சேவை வரி விதிப்பு தொடர்பாக வருவாய்த்துறை விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிடும்.
சாதாரண டீசல் விற்கப்படாதது மற்றும் டீசலுக்கான சுங்க வரி குறித்து விரைவில் பெட்ரோலியத்துறை விளக்க அறிக்கையை வெளியிடும். சாதாரண டீசலை போதுமான அளவுக்கு விற்க வேண்டும் என எண்ணை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படும்.
ஸ்பீட் கருவி - லாரிகளில் வேகக்கட்டுப்பாடு தொடர்பான ஸ்பீட் கருவி பொருத்துவது தொடர்பான பிரச்சினை தொடர்பாக, அனைத்து மாநில போக்குவரத்து அமைச்சர்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி இறுதி முடிவை எடுக்கும்.
பலமுனை வரி விதிப்பு தொடர்பாக - ஒரு மாவட்டத்திற்குள்ளேயே பல முனை வரி விதிப்பு இருப்பதை மாற்றி ஒரே மாதிரியான வரி விதிப்பை அமல்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து பரிசீலிக்கப்படும்.
சட்டவிரோத வரி வசூல் - சோதனைச் சாவடிகளில் சட்டவிரோதமாக வரி வசூல் செய்வோர் மீது கடும் நடவடிக்ைக எடுக்குமாறு மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்படும்.
டீசல் வரி - டீசல் மீது விதிக்கப்படும் வரி மூலம் கிடைக்கும் வருவாய், மத்திய சாலை நிதியத்திற்கு போய்ச் சேருகிறது. இதன் மூலம் தேசிய நெடுஞ் சாலைகளின் அடிப்படைக் கட்டமைப்பு, பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்கு அது பயன்படுகிறது. இதுதவிர மாநில நெடுஞ்சாலைகள், ஊரகச்சாலைகள், ரயில்வே திட்டங்களுக்கும் இந்த நிதி பகிர்ந்தளிக்கப்படுகிறது.
பாலங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதற்காக வசூலிக்கப்படும் வரி, சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு வழங்கப்படுகிறது என்று விவரித்தார்.
பேச்சுவார்த்தையின் இறுதியில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. தங்களது சங்க உறுப்பினர்களுடன் பேசி இறுதி முடிவை சொல்வதாக இரு சங்கங்களின் நிர்வாகிகளும் அமைச்ர் டி.ஆர். பாலுவிடம் தெரிவித்தனர்.
இறுதி முடிவு எடுக்கப்படும் வரை ஸ்டிரைக் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.