அமர்நாத் நில விவகாரம்: ஜம்முவில் தொடரும் கலவரம்-ஊரடங்கு
ஜம்மு: அமர்நாத் கோவில் தேவஸ்தானத்திற்கு நிலத்தை வழங்குவதற்கான முடிவை ஜம்மு காஷ்மீர் மாநில அரசு திரும்பப் பெற்றதை எதிர்த்து ஜம்முவில் கலவரம் தீவிரமடைந்துள்ளது. அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அறவே இல்லை. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
ஸ்ரீ அமர்நாத் கோவில் தேவஸ்தான வாரியத்திற்கு ஜம்மு காஷ்மீர் மாநில அரசு சமீபத்தில், சுற்றுலாத்துறையின் நிலத்தை வழங்கியது. இந்த நிலத்தில், யாத்ரீகர்கள் தங்கிச் செல்லும் அறைகளைக் கட்ட தேவஸ்தானம் தீர்மானித்திருந்தது.
ஆனால் இந்த முடிவைக் கண்டித்து ஸ்ரீநகரில் பெரும் போராட்டம் வெடித்தது. தடியடி, கலவரம், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சிலர்உயிரிழந்தனர். இதையடுத்து முதல்வர் குலாம் நபி ஆசாத் தலைமையிலான அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி அறிவித்தது.
இதையடுத்து ஆட்சியைக் காப்பாற்றும் நோக்கில், அமர்நாத் தேவஸ்தானத்திற்கு நிலம் வழங்கும் முடிவை நேற்று ஜம்மு காஷ்மீர் மாநில அமைச்சரவை திரும்பப் பெற்றது.
இதற்கு விஸ்வ இந்து பரிஷத், பாஜக உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளன.
இதனால் ஜம்முவில் பெரும்கலவரம் வெடித்தது. நேற்று முழுவதும் அங்கு பல இடங்களில் போராட்டம் வெடித்தது. இதையடுத்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்படியும் போராட்டம் ஓயாததால்,கண்டதும் சுட உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் ஊரடங்கு உத்தரவு தொடருகிறது. ஜம்மு முழுவதும் வெறிச்சோடிக் கிடக்கிறது. மக்கள் நடமாட்டம் அறவே இல்லை. ஓரிரு இடங்களில் கலவரங்கள் நடந்துள்ளன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
பாஜக-விஎச்பி நாளை பந்த்:
ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் முடிவை கண்டித்து நாளை அகில இந்திய பாரத் பந்த்தை நடத்த வி.எச்.பி. அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து வி.எச்.பி. பொதுச் செயலாளர் பிரவீன் டகோடியா கூறுகையில், பாகிஸ்தானுக்கு ஆதரவானவர்களுக்கே குலாம் நபி ஆசாத் அரசு சாதகமாக உள்ளது மீண்டும் நிரூபணமாகியஉள்ளது. நாட்டின் மதச்சார்பற்ற பாரம்பரியத்திற்கு எதிரான நடவடிக்கையை குலாம் நபி ஆசாத் அரசு எடுத்துள்ளது என்றார்.
இந்த பந்துக்கு பாஜகவும் ஆதரவு தெரிவித்துள்ளது.