6ம் தேதி பிரதமர் ஜப்பான் பயணம்-அன்றே இடதுசாரிகள் ஆதரவு வாபஸ்?
அணுசக்தி ஒப்பந்த பிரச்சினையில், மத்திய அரசுக்கு இடதுசாரி கட்சிகள் இறுதி கெடு விதித்துள்ளன.
வரும் 7ம் தேதி ஜப்பானில் நடக்கும் ஜி-8 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் திட்டமிட்டுள்ளார். இதற்காக 6ம் தேதி அவர் ஜப்பான் புறப்படுகிறார்.
அணு ஒப்பந்தம் குறித்து சர்வதேச அணு சக்திக் கழகத்துடன் (IAEA) பேச நான் அனுமதிக்கப்பட்டால் தான் ஜி-8 மாநாட்டில் பங்கேற்பேன் என பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
ஜி-8 என்பது அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, கனடா, இத்தாலி, ரஷ்யாவை உள்ளடக்கிய பணக்கார நாடுகளின் அமைப்பு. இந்த அமைப்பில் சீனா, இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில முக்கிய நாடுகள் சிறப்பு அழைப்பாளர்களாக (observers) உள்ளன.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர், சர்வதேச அணு சக்திக் கழகத்தின் தலைவர் ஆகியோரும் இதில் பங்கேற்பர்.
ஜப்பானில் நடக்கும் இந்த அமைப்பின் மாநாட்டில் பங்கேற்கும் அமெரிக்க அதிபர் புஷ், IAEA தலைவர் முகம்மத் அல் பாரடாய் ஆகியோருடன் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் குறித்துப் பேச பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளார்.
இந் நிலையில் தான் ஜி-8 மாநாட்டுக்கே பிரதமர் போகக் கூடாது என இடதுசாரிகள் கூறியுள்ளனர். ஜி-8க்குப் போய் புஷ்-பாரடாயுடன் பேசிவிட்டு வந்தால் அடுத்ததாக IAEAவுடனான பேச்சை இந்தியா தொடங்கும், அதைத் தொடர்ந்து இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என இடதுசாரிகள் கருதுகின்றன.
(மேலும் ஐஏஇஏவுடன் பேச்சு நடத்த அதிகாரிகள் குழு ஒன்றை வரும் 4ம் தேதி வியன்னாவுக்கு அனுப்பி வைக்கவும் மத்திய அரசு முடிவெடுத்துவிட்டது)
இந் நிலையில் ஏசியா நெட் தொலைக்காட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில்,
இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தை ஏற்கவே மாட்டோம். நான் ஐஏஇஏவுடன் பேச அனுமதிக்கப்பட்டால் தான் ஜி-8 மாநாட்டுக்கே போவேன் என்று பிரதமர் கூறியிருந்தார். இப்போது அவர் இந்த மாநாட்டு்க்கு போக முடிவு செய்துவிட்டதைப் பார்த்தால் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட மத்திய அரசு முடிவு செய்துவிட்டது தெளிவாகிவிட்டது.
மேலும் ஐஏஇஏவுடன் பேச குழுவை அனுப்பவும் முடிவு செய்துவிட்டனர். இதனால் இனியும் இவர்களை ஆதரிக்க முடியாது. ஆதரவை வாபஸ் பெறுவது தான் ஒரே வழி. ஆதரவை எப்போது வாபஸ் பெறுவது என்பது குறித்து வரும் 4ம் தேதி (வெள்ளிக்கிழமை) கூடும் இடதுசாரி கட்சிகளின் கூட்டுக் கூட்டத்தில் முடிவு செய்துவிடுவோம் என்றார்.
இதன்மூலம் ஆதரவை வாபஸ் பெற இடதுசாரிக் கட்சிகள் 3 நாட்கள் கெடு விதித்துள்ளன. அதற்குள் மத்திய அரசு தனது நிலையை மாற்றிக் கொண்டால் மட்டுமே ஆதரவு தொடரும். ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
பிரதமர் 6ம் தேதி ஜப்பானுக்கு விமானம் ஏறியவுடன் ஆதரவு வாபஸ் அறிவிப்பை இடதுசாரிக் கட்சிகள் வெளியிட்டுவிடுவர் எனத் தெரிகிறது.