தொடர்கிறது பெட்ரோல் வேதனை-பங்குகளில் அடிதடி!
கடந்த ஒரு வாரமாக பெட்ரோல் பங்க்குகளில் விலை அதிகம் உள்ள ப்ரீமியம் பெட்ரோல், டீசலை மட்டுமே விற்று வந்தனர். அதற்கே மக்கள் எரிச்சலான நிலையில், நிலைமை மேலும் மோசமாகி, அந்த பெட்ரோல்-டீசலுக்கும் கூட இரு நாட்களுக்கு முன் திடீரென தட்டுப்பாடு ஏற்பட்டது.
பல பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்ட நிலையில் திறந்திருக்கும் சில பெட்ரோல் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதையடுத்து ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் நிற்பது மாதிரி மக்களை நிற்க வைத்து பெட்ரோல்-டீசலை வினியோகித்து வருகின்றனர்.
காருக்கு 5 லிட்டர், பைக்குக்கு 2 லிட்டர் என ரேசன் மாதிரியே தான் பெட்ரோல் தரப்படுகிறது. கார், பைக்குகள் சகிதம் மக்கள் பெட்ரோல் பங்குகளை மொய்த்துள்ளதால் எங்கெல்லாம் பங்க் உள்ளதோ அங்கெல்லாம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பங்க்குகள் அருகே போக்குவரத்து போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
கேன்களை கொண்டு வந்தால் பெட்ரோல் போடமாட்டோம் என சில பங்குகளில் கூறியதால், அடிதடி கூட நடந்தது.
மேலும் பல பங்குகளில் வண்டியை கொண்டு வராதீர்கள்.. இடமில்லை , எனவே கேன்களில் மட்டுமே பெட்ரோல்-டீசல் தருவோம் என்றும் கூறினர்.
இந்த புதிய 'பங்க் ரூல்ஸ்'களால் பல பங்குகளில் வாக்குவாதமும் கைகலப்புகளும் நடந்து வருவதால் சட்டம்-ஒழுங்குப் பிரிவு போலீசாரும் நிறுத்தப்பட்டு கிட்டத்தட்ட போலீஸ் பாதுகாப்புடன் தான் பெட்ரோல் பங்குகள் செயல்பட வேண்டிய நிலை உள்ளது.
இன்று அதிகாலை 4 மணிக்கே பெட்ரோல் பங்க் முன் ஏராளமானோர் வரிசையில் வந்து காத்திருந்தனர். பங்குகளில் அருகே ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலால் இன்று காலை பல அலுவலக ஊழியர்கள் நேரத்துக்கு அலுவலகம் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.
டீசல் லிட்டர் ரூ.100:
இந் நிலையில் ஈஞ்சம்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் டீசல் லிட்டருக்கு ரூ.100-க்கு விற்கப்பட்டு வருகிறது.
சில இடங்களில் அதிக விலை கொண்ட பிரீமியம் பெட்ரோல் எனக் கூறி சாதாரண பெட்ரோலையும் விற்று வருகின்றனர்.
மேலும் பல பங்குகளே கள்ளச் சந்தைகளாக மாறி பெட்ரோல்-டீசலை பதுக்கி வைத்துள்ளனர். இதையடுத்து பெட்ரோல்-டீசல் பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.