எண்ணை கப்பல் இன்று சென்னை வருகிறது - தவிப்பு தொடருகிறது
சென்னை: சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக நிலவி வரும் டீசல் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு முழு அளவில் குறையாத நிலையில், சென்னைக்கு டீசல் ஏற்றி வரும் கப்பல் இன்று வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று முன்தினம் காலையில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை தலைவிரித்தாட தொடங்கியது. இன்னும் அதன் ஆட்டம் அடங்கவில்லை.
கடந்த 2 நாட்களாக பெட்ரோல், டீசல் கிடைக்காமல் இயல்பான வாகனப் போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு நடவடிக்கையில் இறங்கியது.
எண்ணை நிறுவன அதிகாரிகளை வரவழைத்து தலைமைச் செயலாளர் திரிபாதி பேச்சுவார்த்தை நடத்தினார்.இதில் எண்ணை கப்பல்வராததே இதற்குக் காரணம் என எண்ணை நிறுவனங்கள்தெரிவித்தன. இருப்பினும் நேற்று மாலையில் 20 லட்சம் லிட்டர் பெட்ரோல், டீசலை விடுவிப்பதாக அவர் உறுதியளித்தன.
இதையடுத்து மாலைக்குள் நிலைமை சரியாகி விடும் என தலைமைச் செயலாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இருப்பினும் நேற்று மாலை சில பங்குகள் மட்டும் திறக்கப்பட்டு பெட்ரோல், டீசல் விற்பனை நடந்தது. இருப்பினும் இந்த பங்குகளிலும் சில மணி நேரங்களில் ஸ்டாக் இல்லை என்றுகூறப்பட்டது. இதனால் மக்கள் தவித்துப் போயினர்.
நேற்றும் இரவு வெகு நேரம் வரை பெட்ரோல், டீசலுக்காக மக்கள் அலைந்ததைக் காண முடிந்தது. இன்று காலையிலும் கூட பெரிய அளவிலான நீண்ட வரிசை பெட்ரோல் பங்குககள் முன்பு காணப்பட்டது. இருப்பினும் குறைந்தபட்ச ஸ்டாக்கை மட்டுமே வைத்து வழங்கி வருவதாக பெட்ரோல் பங்குகள் கூறுகின்றன.
இந்த நிலையில், சென்னைக்கு டீசலுடன் வந்து கொண்டிருக்கும் கப்பல் இன்று வந்து சேரும் என பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பூரண் ஸ்வராஜ்யா என்று பெயரிடப்பட்டுள்ள அந்தக் கப்பலில் 30 ஆயிரம் கிலோ லிட்டர் டீசல்உள்ளது. கொச்சியிலிருந்து கிளம்பிய இந்தக் கப்பல் இலங்கையை சுற்றிக் கொண்டு சென்னைக்கு வந்து கொண்டுள்ளது. இன்று காலை 10 மணிக்குள் இக்கப்பல் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதன் பின்னர் பிற்பகல் 1 மணிக்கு கப்பலிலிருந்து டீசலை இறக்கும் நடவடிக்கை தொடங்கும்.
பின்னர் பைப்லைன்கள் வழியாக உடனடியாக பெட்ரோலிய நிறுவனங்களுக்கு இது அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல் பங்குகளுக்கு விநியோகிக்கப்படும். எனவே மாலைக்குள் நிலைமை சரியாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.