ரூ. 4790 கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை-கடலூர் அருகே அமைகிறது
சென்னை: கடலூர் அருகே 60 லட்சம் டன் திறன் கொண்ட, பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை 4 ஆயிரத்து 790 கோடி முதலீட்டில் தொடங்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழக அரசின் டிட்கோ நிறுவனம், நாகார்ஜுனா உரம் மற்றும் இரசாயன நிறுவனம், டாடா குழுமம் மற்றும் கடலூர் துறைமுகக் கம்பெனி ஆகியவற்றுடன் இணைந்து ஆண்டுக்கு 60 லட்சம் டன் திறன் கொண்ட பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைத் திட்டத்தை கடலூருக்கு அருகில் 4 ஆயிரத்து 790 கோடி ரூபாய் முதலீட்டில் கூட்டுத் துறையில் தொடங்கிட திட்ட மிட்டுள்ளது.
ஏறத்தாழ 33 மாதங் களில் இத்திட்டத்தின் பணி கள் முழுமையாக நிறை வேற்றப்பட்டு, 2011 ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கும். நாகார்ஜுனா எண்ணெய் நிறுவனத்தின் இந்த பெட்ரோலியம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தமிழ்நாட்டில் அதிகபட்ச முதலீட்டில் உருவாகும் திட்டமாகும்.
தமிழகத்தின் போக்குவரத்து மற்றும் ஏனைய துறைகளின் எரிபொருள்கள் தேவையை நிறைவு செய்ய இத்திட்டம் பெரிதும் உதவும்.
புதிய தொழில் திட்டங்கள் மற்றும் எதிர்கால மின் உற்பத்தித் திட்டங்கள் ஆகியவற்றிற்குத் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்குப் பயன்படும் வகையில் ஆண்டுக்கு 250 லட்சம் டன் சரக்குகளைக் கையாளும் திறனுடன் 1500 கோடி ரூபாய் முதலீட்டில் நாகார்ஜுனா எண்ணெய் நிறுவனத்தின் மூலம் திருச்சோபுரத்தில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.
இத்துறைமுகம், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் உருவாகவிருக்கும் பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் உற்பத்திக்கான தொழில்களுக்கு ஒரு முக்கிய கடல்சார் உள்கட்டமைப்பாகவும் விளங்கும்.
கடலூருக்கு அருகில் சிலம்பிமங்கலம் என்ற இடத்தில் குட் எர்த் கப்பல் கட்டும் நிறுவனத்தினால் 75 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட புதிய கப்பல் கட்டும் தளம் ரூ. 1000 கோடி முதலீட்டில் அமைக்கப்படவிருக்கிறது.
கடலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இக்கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்குத் தேவைப்படும் சாதனங்களை உருவாக்கிட சிறுதொழில்கள் பல பெருமளவில் உருவாகக் கூடிய வாய்ப்புகளும் ஏற்படும்.
மொத்தம் 7 ஆயிரத்து 290 கோடி ரூபாய் முதலீட்டில் அமையும், நாகார்ஜுனா நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைத் திட்டம், திருச்சோபுரம் துறைமுகத் திட்டம், சிலம்பிமங்கலத்தில் குட்எர்த் நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டம் ஆகிய மூன்று திட்டங்களையும் முதல் - அமைச்சர் கருணாநிதி இன்று அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்.
இந்த மூன்று திட்டங்களின் மூலமும், துணைத் தொழில் கள் மூலமும் ஏறத்தாழ 5 ஆயிரத்து 700 பேருக்கு நேரடியாகவும், 11 ஆயிரத்து 300 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியில், மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமி நாதன், மத்திய சட்டத் துறை இணை அமைச்சர் கே.வேங்கடபதி, தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.