அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது உறுதி: வீரப்ப மொய்லி
டெல்லி: அணு சக்தி ஒப்பந்தம் தேச நலனுக்கு அவசியம். எனவே அதை நிறைவேற்றுவது உறுதி, கண்டிப்பாக அதை நிறைவேற்றுவோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகள் முட்டுக்கட்டை போட்டு வருவதால், அவர்களிடம் தொங்கிக் கொண்டிருக்காமல், சமாஜ்வாடிக் கட்சியின் ஆதரவைப் பெறும் முடிவை காங்கிரஸ் எடுத்துள்ளது.
இதுதொடரபாக நேற்று நடந்த 3வது அணித் தலைவர்களின் கூட்டத்தையும் அது ஆவலோடு எதிர்பார்த்திருந்தது. ஆனால் அரசுக்கு ஆதரவு என்பது குறித்து எந்த முடிவையும் நேற்று 3வது அணி எடுக்கவில்லை. இதனால் காங்கிரஸ் ஏமாற்றமடைந்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த வீரப்ப மொய்லி, 3வது அணி உடனடியாக தனது ஆதரவை தெரிவிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களின் நிலைசரியானதுதான். அவர்கள் மீது எங்களது நிர்ப்பந்தத்தை திணிக்க விரும்பவில்லை.
அணு சக்தி ஒப்பந்தம் தேச நலனுக்கு உகந்தது, அவசியம். எனவே அது கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.
அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. எப்போது தேர்தல் வருமோ அப்போதுதான் தேர்தலை சந்திப்போம் என்றார் மொய்லி.