பேச்சுவார்த்தை வெற்றி - லாரி ஸ்டிரைக் வாபஸ்
டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும், சேவை வரியை ரத்து செய்ய வேண்டும், பழைய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும்வரியை நீக்க வேண்டும், புதிய சாலைகளில் வரிவசூல் தொடர்பாக கமிட்டி அமைத்து அதில் லாரி உரிமையாளர்களையும் இடம் பெறச் செய்ய வேண்டும், சாதாரண டீசல் தாராளமாக விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2ம் தேதி நள்ளிரவு முதல் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது.
இதனால் நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போனது. தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள பொருட்கள் கொண்டு செல்ல வழியில்லாமல் தேங்கின. காய்கறிகள், சமையல் எண்ணை உள்ளிட்டவற்றின் விலையும் பல மடங்கு உயர்ந்தது.
இந்த நிலையில் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன், மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து நேற்று மட்டும் 3 சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது.
மத்திய அரசுத் தரப்பில் போக்குவரத்துத்துறை இணைச் செயலாளர், தேசிய நெடுஞ்சாலைத் துறை தலைவர் ஆகியோரும், அகில இந்திய டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் மற்றும் அகில இந்திய தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மொத்தமாக 32 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், நேற்று நள்ளிரவில் நடந்த 4வது சுற்றின்போது உடன்பாடு ஏற்பட்டது. லாரி உரிமையாளர்களின் அனைத்துக் கோரிக்ககளையும் ஏற்பதாக மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை விலக்கிக் கொள்ள லாரி உரிமையாளர்கள்தீர்மானித்தனர்.
இதுகுறித்து அகிலஇந்திய டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளரும், கர்நாடக மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவருமான சண்முகப்பா கூறுகையில், எங்களுக்கும் அரசுக்கும் இடையே தொடர்ந்து 32 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எங்களது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டன. இதுதொடரபாக இன்று அதிகாலை 2.30 மணிக்கு உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தை விலக்கிக் கொண்டு அதிகாலை முதல் லாரிகளை இயக்க தீர்மானிக்கப்பட்டது என்றார்.
இதையடுத்து இன்று அதிகாலை முதல் லாரிகள் அனைத்தும் ஓடத் தொடங்கின. இதன் மூலம் கடந்த 2 நாட்களாக நிலவி வந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளது. இனிமேல் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் வரத்து அதிகரித்து, விலைவாசி குறையும் என்ற நிம்மதி ஏற்பட்டுள்ளது.