கொத்தடிமை-கர்நாடகத்தில்2 நெல்லை மாணவர்கள் மீட்பு
சுரண்டை: கர்நாடகத்தில் கொத்தடிமைகளாகத் தவித்த நெல்லை மாணவர்கள் இருவர் கர்நாடகத்தில் மீட்கப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள பாலபத்திரராமபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சண்முகம் மகன் மாரிமுத்து, ராமலிங்கம் மகன் ராஜ்குமார்.
இருவரும் கடந்த ஏப்ரலில் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். விடுமுறையில் ஊர் சுற்றியவர்களை பெற்றொர்கள் கண்டித்தனர். இதனால் மாணவர்கள் இருவரும் வீட்டில் கோபித்துக் கொண்டு கடந்த 26.4.08 அன்று ராஜ்குமார் அண்ணன் வேலை செய்யும் திருப்பூருக்கு பஸ் ஏறினர்.
திருப்பூர் பஸ் நிலையத்தில் இறங்கிய இவர்களை சந்தித்த புரோக்கர் பெருமாள் அன்பாக பேசி ரூ. 5 ஆயிரம் சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.
இதனை நம்பிய மாரிமுத்து, ராஜ்குமார் ஆகியோர் பெருமாளுடன் சென்றனர். பைக்கில் அழைத்து சென்ற அவர் திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் அவர்களை கொண்டு சென்று விட்டார்.
இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து பஸ்சில் கர்நாடக மாநிலம் சென்ராயபட்டணம் என்ற இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அங்குள்ள காட்டு பகுதியில் ஆழ்துணை கிணறு பணி நடந்த இடத்தில் வேலைக்கு சேர்த்து விடப்பட்டனர்.
இரவு, பகல் பாராமல் தொடர்ந்து வேலை செய்ய வலியுறுத்தப்பட்டனர். சாப்பாடும் ஒழுங்காக கொடுக்கவில்லை. இதனால் பசி கொடுமையால் தவித்தனர். தங்களுக்கு ரூ.5 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த இவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதையடுத்து மாரிமுத்து, ராஜ்குமார் ஆகியோர் தாங்கள் வைத்திருந்த செல்போன் மூலம் ஊரில் உள்ள பெற்றொருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஆழ்துணை கிணறு பகுதியை கான்ட்ராக்ட் எடுத்துள்ளவரின் செல்போன் நம்பரையும் அவர்களுக்கு கொடுத்து தங்களை எப்படியாவது மீட்கும்படி கூறினர்.
இதைத் தொடர்ந்து பெற்றொர்கள் அந்த கான்ட்ரக்டரை அவர் நம்பரில் தொடர்பு கொண்டு இருவரையும் ஊருக்கு அனுப்பு வைக்கும்படி கூறினர். அதற்கு அவர் அவர்களை ஒரு சில நாட்களில் அனுப்பி வைப்பதாக கூறினார்.
ஆனால் ஒரு மாதமாகியும் அனுப்பவில்லை. இதுகுறித்து ஊத்துமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து கரூரில் இயங்கி வரும் ஆழ்துளை கிணறு கிளை அலுவலகத்திற்கு போலீசார் மற்றும் பெற்றொர்கள் சென்றனர். அதன்பிறகு அங்குள்ளவர்களின் உதவியுடன் கர்நாடகம் சென்று மாணவர்கள் இருவரையும் மீட்டு நேற்று ஊருக்கு அழைத்து வந்தனர்.