சீட் தந்தால் கூட்டணி: இது கார்த்திக் காமெடி!
மதுரை: சீட் தரும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம். அரசியலில் எதுவும் நடக்கலாம். அதிமுக கூட்டணி குறித்து இதுவே எனது பதில் என்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் கார்த்திக் பேசுகையில், கூட்டணிக்கு வரும்படி எல்லா தரப்பினரிடமிருந்தும் நெருக்கடி வருகிறது.கட்சிகளுக்குள் கூட்டணி அவசியம். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைவது குறித்து அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பது என் பதில். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்ததா? என கூற முடியாது.
சீட் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி வைப்பேன். தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்க தயார். தனி ஒரு கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர்ந்தாலும் ஆபத்து.
சரத்குமார், விஜயகாந்த் சிறப்பாக செயல்படுகின்றனர். கூட்டணி வைக்க மாட்டேன் என விஜயகாந்த் கூற அவருக்கு உரிமையுள்ளது. என்னை யாரும் பின்னால் இருந்து இயக்கவில்லை.
பார்வர்ட் பிளாக் கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கு கூட மேலிடத்தை கேட்க வேண்டியிருந்தது. அத்தகைய தவறுகள் நிகழாத வகையில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி செயல்படும்.
முத்துராமலிங்கத்தேவர், மூக்கையாத்தேவர் பெயர்களை சொல்லி பார்வர்ட் பிளாக் தலைவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். தற்போது மக்கள் அந்த கட்சியில் இல்லை. அவர்கள் அ.இ.நா.ம.,கட்சிக்கு வந்து விட்டனர்.
தமிழகத்தில் பல பிரச்னைகள் இருப்பது உண்மை. அப்பிரச்னைகளை தீர்க்க நல்ல காரியங்களை அரசு செய்வதும் உண்மை. அதன் பயன் மக்களை சென்றடையவில்லை என்பதும் உண்மை.
அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது அவசியம். அதனை நிறைவேற்ற விடாமல் மத்திய அரசின் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட்கள், பார்வர்ட் பிளாக் போன்றவை மிரட்டுவதை ஏற்க முடியாது என்றார் கார்த்திக்.