2 ம.ஜ.த., 2 காங். எம்.எல்.ஏக்கள் ராஜினாமா - பாஜகவில் இணைந்தனர்
கர்நாடகத்தில் பாஜக தலைமையில் புதிய ஆட்சி அமைந்த பின்னர் முதல் அரசியல் திருப்பமாக இரு கட்சிகளைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏக்கள் அக்கட்சிகளிலிருந்து விலகி தங்களது பதவிகளையும் ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்துள்ளனர்.
கார்வார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ அஸ்நோடிகர் ஆனந்த் வசந்த், மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த சிவண்ணகெளடா நாயக், முன்னாள் அமைச்சர் பாலச்சந்திர லட்சமண்ராவ் ஜாரகிஹோலி ஆகியோர் நேற்று தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்துள்ளனர்.
3 பேரும் சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டாரை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்கினர். அவர்களது ராஜினாமா கடிதங்களை ஏற்றுக் கொள்வதாக ஷெட்டார் பின்னர் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று காலை மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. கட்சியை விட்டு விலகினார், தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.
தொட்டபல்லாபூர் தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நாராயணசாமி. இன்று காலை இவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜக தலைவர் சதானந்த கெளடா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
முன்னதாக சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டாரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்தார்.
நாராயணப்பா, மூத்த காங்கிரஸ் எம்.பி. ஜாலப்பாவின் மகன் ஆவார்.
காங்கிரஸிலிருந்து விலகியது குறித்து நாராயண சாமி கூறுகையில், எனது தொகுதி மக்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்தேன். தொட்டப்பல்லாபூர் இடைத் தேர்தலில் பாஜக சார்பில் நான் போட்டியிடுவேன் என்றார்.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து விலகியிருப்பதால் பாஜகவின் நிலை ஸ்திரமாகியுள்ளது. எதிர்க்கட்சி வரிசையில் 108 பேர் இருந்தனர். தற்போது அது 104 ஆக குறைந்துள்ளது. பாஜக அரசுக்கோ 116 பேரின் ஆதரவு உள்ளது.