For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும்: ஏ.பி.பரதன்

By Staff
Google Oneindia Tamil News

Communist
கொல்கத்தா: இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களது பிரிவினையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய நேரம் வந்து விட்டது. இரு கட்சிகளும் இணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹிரேன் முகர்ஜியின் நூற்றாண்டு விழா கொல்கத்தாவில் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தும், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதனும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஏ.பி.பரதன் உருக்கமாக பேசினார். இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும் என அப்போது அவர் விருப்பம் தெரிவித்தார்.

பரதன் பேசுகையில், ஹிரேன் முகர்ஜி மறைந்தபோது இரு கட்சிகளும் இணைய வேண்டும் என ஆசைப்பட்டார். அதுதான் அவரது கடைசி ஆசையாக, நிறைவேறாத ஆசையாக இருந்தது. அது கனிய வேண்டிய நேரம் வந்துள்ளது. அதற்காக இரு கட்சிகளும் பாடுபட வேண்டும்.

ஹிரேன் ஆசைப்பட்டது நடக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் மறைய வேண்டும்.

இந்த மேடையைப் பயன்படுத்தி நான் எனது கருத்துக்களை யார் மீதும் திணிக்க விரும்பவில்லை. இருப்பினும் ஹிரேன் விரும்பியதைத்தான் இங்கு மீண்டும் கூறியுள்ளேன் என்றார் பரதன்.

பரதனின் பேச்சை பிரகாஷ் காரத்தும், மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டச்சார்யாவும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தனர்.

சிபிஐ பிரிந்த கதை ...

1964ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டது. அதிலிருந்து பிரிந்தவர்கள் உருவாக்கிய கட்சிதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்).

64 தேர்தலில் சிபிஐயின் சில முடிவுகளால் அதிருப்தி அடைந்தவர்கள் கட்சியிலிருந்து பிரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்தனர். அதன் பிறகு இரு கட்சியினரும் விரோத மனப்பான்மையுடன்தான் செயல்பட்டு வந்தனர்.

ஆனால் போகப் போக குரோத மனப்பான்மை மாறி இரு கட்சிகளும் இணக்கத்துடன் செயல்பட ஆரம்பித்தன. இதன் விளைவாக இடதுசாரி கூட்டணி, 1977ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தது.

அதன் பின்னர் இரு கட்சிகளின் கூட்டு செயல்பாடுகள் மேலும் வலுவடைந்தது. இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாகவும் இடதுசாரி கூட்டணி திகழ ஆரம்பித்தது.

இந்த நிலையில்தான் இடதுசாரிகள் இணைய வேண்டும் என பரதன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X