உடனே மெஜாரிட்டியை நிரூபியுங்கள்-பாஜக
ஆதரவை வாபஸ் பெறுவதாக இடதுசாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின் பாஜகவின் செய்தி்த் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் நிருபர்களிடம் கூறுகையில்,
மத்திய அரசு துளியும் தாமதிக்காமல் உடனடியாக தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும். அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை உடனடியாக கொண்டு வர மறுத்தால் ஜனாதிபதி தலையிட்டு பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட வேண்டும்.
1999ம் ஆண்டில் பாஜக ஆட்சியில் உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க பிரதமர் வாஜ்பாய்க்கு அப்போதைய ஜனாதிபதி உத்தரவிட்டார். அதே போல இப்போதும் உத்தரவிட வேண்டும்.
சமாஜ்வாடி கட்சியின் ஆதரவு இருப்பதாக வெளியில் சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அதை நிரூபிக்க வேண்டிய இடம் நாடாளுமன்றம் என்றார் ஜாவேத்கர்.
அத்வானி இல்லத்தில் அவரச கூட்டம்:
இந் நிலையில் பாஜக தலைவர் அத்வானியின் இல்லத்தில் இன்று மூத்த பாஜக தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.
அதில் பேசிய தலைவர்கள், பெரும்பான்மையை நிரூபிக்காத வரை, சிறுபான்மை அரசாக உள்ள பிரதமர் மன்மோகன் சிங் அரசு, சர்வதேச ஒப்பந்தங்கள் எதிலும் கையெழுத்திடக் கூடாது, முக்கிய சர்வதேச பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவும் கூடாது என்றும் கருத்து தெரிவித்தனர்.
ஐசியுவில் மத்திய அரசு:
இதற்கிடையே, திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறுகையில், மத்திய அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும். பெரும்பான்மை பலத்தை லோக்சபாவில் நிரூபிக்க வேண்டும்.
கணக்குப்படி பார்த்தால் மத்தியில் தற்போது அரசு எதுவும் இல்லை. மத்திய அரசு தற்போது கவலைக்கிடமான நிலையில், ஐசியூவில் உள்ளது. பிற கட்சிகள் சேர்ந்து காப்பாற்ற வேண்டிய மோசமான நிலையில் அது உள்ளது.
நாட்டில் பொதுத் தேர்தல் வர வேண்டும், தற்போதைய அரசு போக வேண்டும், நல்லாட்சி மலர வேண்டும் என்பதே மக்களின் தற்போதைய கருத்தாகும் என்றார்.