சேரன்மகாதேவி- வக்கீல் வெட்டிக் கொலை
சேரன்மகாதேவி: கோயில் தகராறு முன்விரோதம் காரணமாக, நீதிமன்றத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த வக்கீல் ஒருவரை வெட்டிக் கொலை செய்தனர்.
நெல்லை சுத்தமல்லி அருகே நரசிங்கநல்லூரை சேர்ந்தவர் சரவணன். பாளை நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வந்தார். இவரது அலுவலகம் பாளையில் உள்ளது. இரவு 10 மணிக்கு பணி முடிந்து பைக்கில் சரவணன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்..
வீட்டருகே வந்தபோது 11 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சரமரியாக வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். கடந்த மாதம் 13ம் தேதி நரசிங்கநல்லூர் சுடலைமாடசாமி கோயில் கொடைவிழா நடந்தது.
அப்போது இரு பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தனது உறவினர் கணபதி என்பவருக்கு ஆதரவாக சரவணன் பேசியதாக கருதிய எதிர் தரப்பினர் சரவணனை கொலை செய்யாமல் விடமாட்டோம் என பலர் முன்னிலையில் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து சுத்தமல்லி போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்நிலையில் தான் இவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் நரசிங்கநல்லூரை சேர்ந்த 11 பேரை தேடி வருகின்றனர்.