ரகசியத்தை வெளியில் சொல்ல முடியாது-பிரணாப்
டெல்லி: இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகள் கெடு விதித்து அனுப்பிய கடிதத்துக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிரகாஷ் கராத்துக்கு கடிதத்தை அனுப்பியுள்ள முகர்ஜி நிருபர்களிடம் பேசுகையில்,
சர்வதேச அணு சக்திக் கழகத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பிரகாஷ் கராத்துக்கு, விளக்கமான பதில் கடிதம் அனுப்பியுள்ளேன். ஆனால், ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த முழு விவரமும் வெளியிடப்படுவது வழக்கமில்லை.
இந்தியா மற்றும் சர்வதேச அணுசக்தி கழகத்துக்கு இடையே உள்ள ரகசியமான ஆவணம் என்பதால் அதை வெளியிட முடியாது. ஆவணத்தை முழுமையாக பார்க்க வேண்டுமானால், சம்பந்தப்பட்ட கட்சி அல்லது தலைவர்கள் அரசில் இடம் பெற வேண்டும்.
ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அரசியல் நிலவரம் குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தேன்.
பெரும்பான்மையை நிரூபிப்பது குறித்து ஜனாதிபதி மாளிகையில் இருந்து உத்தரவு வந்ததும் நாடாளுமன்றத்தைக் கூட்டி அரசு மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கூறினார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்க இருந்தது. நம்பிக்கை தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக, அதற்கு முன்னதாகவே அவை கூட்டப்படும்.
நம்பிக்கை தீர்மானத்தை நிறைவேறிய பின்னரே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணு சக்திக் கழகத்துடனான ஒப்பந்தம் செய்யப்படும் என்றார் முகர்ஜி.