ஜனாதிபதியிடம் சமாஜ்வாடி 'ஆதரவு' கடிதம்
டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான அரசை ஆதரிப்பதாக ஜனாதிபதியிடம் சமாஜ்வாடிக் கட்சி இன்று கடிதம் அளித்தது.
அக் கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை இன்று பிற்பகலில் சந்தித்து இது தொடர்பாக கடிதத்தை வழங்கினார்.
முலாயம் சிங்கிடம் 39 எம்பிக்கள் உள்ளனர். இதி்ல் அதீக் அகமத், அப்சல் அன்சாரி ஆகியோர் கிரிமினல் வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ளனர்.
மேலும் அதீக் அகமது, பேணி பிரசாத் வர்மா, ராஜ் பப்பார், முனாவர் ஹூசேன் ஆகிய 4 பேர் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இவர்கள் சமாஜ்வாடி எம்பிக்களாக இல்லை.
ஆனாலும் பேணி பிரசாத் வர்மாவும் ராஜ் பப்பாரும் காங்கிரசுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளனர். இதனால் சமாஜ்வாடியின் சார்பில் 37 எம்பிக்களின் ஆதரவு காங்கிரசுக்கு கிடைக்கும் என அக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் கூறுகிறார்.
ஆனால், அவர் நேற்று கூட்டிய எம்பிக்கள் கூட்டத்தில் மோகன் சிங், ரியோதோய் ராமன் சிங், கீர்த்திவர்தன், ராதேஷியாம் கோரி ஆகியோர் பங்கேற்கவில்லை. இவர்கள் சொந்த காரணங்களுக்காக வரவில்லையே தவிர, இவர்களும் காங்கிரசுக்கு வாக்களிப்பர் என முலாயம் கூறுகிறார். ஆனால், இந்த நால்வரும் காங்கிரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.
சிறையில் இருக்கும் 2 எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்களிக்க முடியாது. இத்தோடு அதிருப்தியாளர்களின் வாக்குகளையும் சேர்த்தால் 6 எம்பிக்களின் வாக்குகளை காங்கிரஸ் இழக்கலாம் எனக் கருதப்படுகிறது.
மேலும் ஒரு எம்பியான ஜெய் பிரகாஷ், காங்கிரசை எதிர்த்தாலும் முலாயம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டுவிடுவார் என்று தெரிகிறது.
இவரைத் தவிர லோக்தந்ரிக் கட்சியைச் சேர்ந்த எம்பியான பாலேஸ்வர் யாதவ், முலாயம் யாருக்கு சொன்னாலும் வாக்களிப்பேன் என அறிவித்துள்ளார்.
இதனால் தனது எம்பிக்கள் 39 பேரில் 38 பேரின் ஆதரவை மத்திய அரசுக்கு வழங்குவதாகக் கூறி ஜனாதிபதியை சந்தித்து இன்று கடிதம் அளித்தது சமாஜ்வாடிக் கட்சி. இந்த 38ல் லோக் தந்ரிக் எம்பியும் அடக்கம்.