'வேடிக்கை பார்க்காதீர்கள்': ஏ.கே.மூர்த்தி
தஞ்சை: எங்களுக்கு ஏற்பட்ட நிலை தோழமை கட்சிகளுக்கும் ஏற்படும் நிலை விரைவில் வரும் என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள் என்று பாமகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கூறியுள்ளார்.
அரியலூரில் போலீசாருக்கும் பாமகவினருக்கும் இடையே நடந்த மோதலில் காயம் அடைந்தவர்கள் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களை பார்த்து ஆறுதல் சொன்ன ஏ.கே. மூர்த்தி பின்னர் செய்தியாளர்ளிடம் பேசுகையில், அரியலூரில் போலீசார் பாமகவினர் மீது தடியடி நடத்தியது, பூட்ஸ் காலில் மிதித்தது வன்மையாக கண்டிக்கதக்கது.
காடு வெட்டி குருவை என்கவுன்டர் மூலம் தீர்த்துக்கட்ட ஆளும் கட்சி திட்டம் தீட்டி விட்டது.
கருணாநிதி கைது செய்யப்பட்ட போது அவரது மகன்கள் கூட சென்று பார்க்கவில்லை. முதன் முதலில் சென்றது பார்த்தது மருத்துவர் ராமதாஸ் தான்.
பாமகவை அழிக்க கருணாநிதி முயற்சி செய்கிறார். எங்களை அழிக்க நினைப்பதாக கருதி தேன் கூட்டில் கைவைத்து விட்டனர்.
எங்களுக்கு ஏற்பட்ட நிலைமை கண்டு தோழமை கட்சிகள் வேடிக்கை பார்க்கின்றன. எங்களுக்கு ஏற்பட்ட நிலை அவர்களுக்கும் ஏற்படும் நிலை வரும் என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள்.
காடுவெட்டி குரு மீது புகார் செய்யதாக கூறுபவர்களே அவர் மீது புகார் செய்யவில்லை என்று கூறியதால் அரசு நிபந்தனை இன்றி அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றார் அவர்.