சர்வதேச அணு ஏஜென்சி உறுப்பினர்கள் பரிசீலனையில் ஒப்பந்தம்
இந்திய-அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கும், அமெரிக்க அதிபர் புஷ்ஷும் ஜப்பானில் சந்தித்துப் பேசிய சில மணி நேரங்களில், வரைவு ஒப்பந்த நகல், சர்வதேச அணு சக்தி ஏஜென்சியிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த நகல் ஏஜென்சியின் போர்டு உறுப்பினர்களிடம் சுற்றுக்கு விடப்பட்டுள்ளதாக ஏஜென்சியின் செய்தித் தொடர்பாளர் மெலிசா பிளமிங் வியன்னாவில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அணு சக்தி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றுதான் இந்த வரைவு ஒப்பந்தம். இதில் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் இடம் பெற்றிருக்கிறது. இந்திய அரசின் வேண்டுகோளின் பேரில் இந்த வரைவு ஒப்பந்த நகல் ஏஜென்சியின் போர்டு உறுப்பினர்களிடம் சுற்றுக்கு விடப்பட்டிருப்பதாக மெலிசா தெரிவித்துள்ளார். இதை போர்டு உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டால் அணு சக்தி ஒப்பந்தம் அடுத்த முக்கிய கட்டத்தை நோக்கி பயணிக்கும்.
வரைவு ஒப்பந்தம் குறித்து மெலிசா வெளியிட்டுள்ள அறிக்கையில், போர்டு உறுப்பினர்கள் ஒப்பந்த நகலை பரிசீலனை செய்வார்கள். இதையடுத்து இதுகுறித்து அனைத்து உறுப்பினர்களும் கூடி விவாதிக்க நாள் குறிக்கப்படும். ஜூலை 28ம் தேதி நடைபெறவுள்ள சிறப்புக் கூட்டத்தில் தேதி முடிவு செய்யப்படும்.
வரைவு ஒப்பந்தம் 30 பக்கங்களைக் கொண்டதாக உள்ளது. இந்த ஒப்பந்தம் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தில் திருப்புமுனையாகும் என்று கூறியுள்ளார்.
ஜி-8 அமைப்பு ஆதரவு:
இதற்கிடையே, இந்திய - அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அனைத்து வகையிலும் ஆதரவு தர ஜி-8 நாடுகளின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச அணு சக்தி ஏஜென்சி, என்.எஸ்.ஜி மற்றும் உறுப்பு நாடுகளுடன் இணைந்து செயலாற்றப் போவதாக ஜி-8 அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது. இதுகுறித்து ஜி-8 மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட அமைப்பின் தலைமை வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா, சர்வதேச அணு சக்தி ஏஜென்சி, அணு பொருள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பு ஆகியவற்றின் இன்னும் முழுமையான அளவில் இணைந்து செயல்பட ஜி-8 தீர்மானித்துள்ளது.
மேலும், இந்தியாவின் சிவில் அணு ஒத்துழைப்பிலும் ஜி-8 நெருங்கிச் செயல்படும். இந்தியாவின் வளர்ந்து வரும் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கிலும் இந்த ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.