ஈரோடு- ஆந்த்ராக்ஸ் தாக்கி 175 மாடுகள் பலி
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஆந்த்ராக்ஸ் நோய்க்கு 175 மாடுகள் பரிதாபமாக பலியானது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தலமலையில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களது முக்கியத் தொழில் ஆடு, மாடு வளர்ப்பது தான்.
தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளை தினமும் காடுப்பகுதியில் மேய விட்டு, மீண்டும் வீட்டிற்கு அருகில் உள்ள மாட்டு தொழுவத்தில் அடைப்பது வழக்கம்.
கடந்த சில தினங்களாக மாடுகள் காடுகளில் செத்துகிடந்தது கண்டு அதன் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதே போன்று மாட்டு தொழுவத்தில் பல மாடுகள் கால்கள் விரைத்து செத்து கிடந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் காரணமாக சுமார் 35 -க்கும் மேற்பட்ட மாடு வளர்க்கும் விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
கோபி, சத்தி பகுதியில் உள்ள கால்நடை டாக்டர்களை அழைத்து வந்து மாடுகளுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் மேலும் சில மாடுகள் அதே போன்று மர்மான முறையில் நேற்று இறந்து போனது.
இதுவரை சுமார் 175 மாடுகள் இறந்து போனதாக கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கன்றனர்.
ஆந்த்ராக்ஸ் தாக்கி மாடுகள் பலியானதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.