வீடுகளிலும் தம் அடிக்க தடை வருகிறது - அன்புமணி தகவல்
பாட்னா: பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதைப் போல வீடுகளிலும் இனிமேல் புகை பிடிக்க தடை விதிக்கப்படும். மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி முதல் இது அமலுக்கு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பாட்னாவில் நடந்த உலக மக்கள் தொகை தொடர்பான கருத்தரங்கைத் தொடங்கி வைத்த அன்புமணி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், சாலைகள், பூங்காக்கள் போன்ற ஓரிரு இடங்களைத் தவிர பொது இடங்களில் பீடி,சிகரெட் புகைக்க இனி தடை விதிக்கபப்டும்.
இதுதவிர தியேட்டர்கள், கிளப்கள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், பொது அலுவலகங்கள், தனியார் கட்டடங்கள் உள்ளிட்ட இடங்களில் நாடு முழுவதும் அக்டோபர் 2ம் தேதி முதல் புகை பிடிக்க தடை விதிக்கப்படும்.
இதுதவிர வீடுகளிலும் கூட புகை பிடிக்க தடை விதிக்கப்படும். வீடுகளில் கணவர் புகை பிடித்தால் அதற்கு மனைவிதான் பொறுப்பாவார். எனவே கணவர்கள் புகைபிடிக்காமல் மனைவிமார்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அரசு அலுவலங்களில் புகை பிடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு சிறப்பாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல அக்டோபர் 2ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளஇந்தத் தடைக்கும் பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும்.
அக்டோபர் 2ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள தடை உத்தரவை மீறுவோருக்கு இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்ைக எடுத்து தண்டிக்கப்படுவார்கள் என்றார் அன்புமணி.