பகுஜன் சமாஜ் கட்சியில் சேர நட்வர் சிங் முடிவு!
ஜெய்ப்பூர்: முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங்கின் மகன் ஜெகத் சிங் இன்று பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். தனது தந்தையும் பகுஜன் சமாஜ் கட்சியில் சேரப் போவதாக அவர் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த எளிய நிகழ்ச்சியில் ஜெகத்சிங் கட்சியில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஜெகத் சிங் பேசுகையில், எனது தந்தையும் பொருத்தமான நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைவார் என்றார்.
பிரணாப் முகர்ஜிக்கு முன்னதாக வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் நட்வர் சிங். ஈராக் எண்ணைக்கு உணவுத் திட்டத்தில் நடந்த ஊழல் விவகாரத்தில் சிக்கி பதவியை இழந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியை விட்டும் அவர் நீக்கப்பட்டார்.
ஜெகத் சிங் கடந்த சட்டசபைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில், ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம், லக்ஷமன்கர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.